பதிவு செய்த நாள்
28 ஆக2018
23:16
உடுமலை : மாநிலத்திலேயே முதல் முறையாக, தானியங்கி பட்டு நுாற்பு இயந்திரத்தை உடுமலையில் அமைக்க, மத்திய பட்டு வாரியம் நிதி ஒதுக்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் ஒரு மாதத்துக்கு, சராசரியாக, 1 லட்சம் கிலோ வெண்பட்டுக் கூடுகள் உற்பத்தியாவதால், மாநிலத்திலேயே உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. பட்டுக் கூடுகளை விற்பனை செய்ய, விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, மத்திய பட்டு வாரியம் சார்பில், 1.41 கோடி ரூபாய்க்கு தானியங்கி பட்டு நுாற்பு இயந்திரம்; 45.76 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தானியங்கி, ‘டூப்பியான்’ நுாற்பு இயந்திரம் மற்றும் 34.18 லட்சம் ரூபாய் மதிப்பில் பலமுனை பட்டு நுாற்பு இயந்திரம் ஆகியவை உடுமலையில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, மத்திய அரசு, 50 சதவீதம்; மாநில அரசு, 25 சதவீதம் மானியம் அளிக்கின்றன. பயனாளிகள், 25 சதவீதம் பங்களிப்பு அளிக்க வேண்டும். இந்த நிதி ஒதுக்கீட்டால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலை பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், கோவிந்தராஜ் கூறியதாவது: உடுமலைக்கு, மத்திய பட்டு வாரியம் சார்பில் நடப்பாண்டு, 2.22 கோடி ரூபாய் மதிப்பிலான மானிய திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், தானியங்கி, டூப்பியான் பட்டு நுாற்பு இயந்திரம், மாநிலத்திலேயே முதல் முறையாக உடுமலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த இயந்திரத்தில், கழிவு மற்றும் தரம் குறைந்த பட்டுக் கூடுகளிலிருந்து, பட்டு நுாலை பிரிக்கலாம். இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வந்தால், பட்டுக்கூடு விற்பனைக்காக கர்நாடக மாநிலத்துக்கு செல்வது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|