பதிவு செய்த நாள்
28 ஆக2018
23:35
மும்பை : வாராக் கடன் தொடர்பாக, மின் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் மீது, திவால் நடவடிக்கை எடுக்க, வங்கிகள் ஆயத்தமாகி வருகின்றன.
பொதுத் துறை வங்கிகளில் வாங்கிய, 3.80 லட்சம் கோடி ரூபாய் கடனை, 70 – 80 நிறுவனங்கள் செலுத்தாமல் உள்ளன.
அவகாசம் :
இக்கடன்களை, 180 நாட்களுக்குள் வசூலிக்குமாறும், தவறினால், திவால் நடவடிக்கை எடுக்குமாறும், பிப்., 12ல், அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கி அறிக்கை அனுப்பியது. இந்த, 180 நாள், ‘கெடு’ நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து, வாராக் கடன் தொடர்பான சமரச தீர்வு, சட்ட நடவடிக்கை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வசதியாக, வங்கிகளுக்கு, 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்குள், வழக்கறிஞர்கள், வல்லுனர்கள் ஆகியோரை அமர்த்தி, கடன் தீர்வு திட்டங்களை, ரிசர்வ் வங்கியிடம் அளிக்கும் நடவடிக்கையில், வங்கிகள் ஈடுபட்டுள்ளன. எனினும், தலா, 2,000 கோடிக்கும் அதிகமான கடனை செலுத்தாமல் உள்ள, 40 நிறுவனங்கள், திவால் நடவடிக்கைக்கு ஆளாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.பி.ஐ., :
மின் துறையில் தான், அதிகபட்சமாக, 34 நிறுவனங்களிடம், 1.50 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன் வசூலிக்க வேண்டியுள்ளது. அவற்றில், 18 நிறுவனங்களின் மனுக்கள், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
தற்போது, ‘ஜிந்தால் இந்தியா தெர்மல் பவர், லான்கோ அன்பரா, ஜி.எம்.ஆர்., – சத்தீஸ்கர், இந்த் – பாரத் எனர்ஜி’ ஆகிய நிறுவனங்களும் திவால் நடவடிக்கைக்கு தப்பாது என, தெரிகிறது. ‘கே.எஸ்.கே.மகாநதி, ஜே.பி., பவர் வெஞ்சர், கோஸ்டல் எனர்ஜென்’ உட்பட, ஏழு மின் நிறுவனங்களின் வாராக் கடன்களுக்கு, கோர்ட்டுக்கு வெளியே தீர்வு காணும் முயற்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, எஸ்.பி.ஐ., தெரிவித்து உள்ளது.
இன்று விசாரணை :
வாராக் கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, 14 நிறுவனங்கள், நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளன. அவற்றை ஒன்றாக விசாரிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த மனு, இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|