பதிவு செய்த நாள்
28 ஆக2018
23:44
புதுடில்லி : வர்த்தகப் போர் காரணமாக, சீனாவிற்கான அமெரிக்காவின் ஏற்றுமதி குறையும் சூழலை பயன்படுத்தி, சீனாவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்க, இந்தியா திட்டமிட்டுள்ளது.
சீனாவின், 3.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதி பொருட்களுக்கு, அமெரிக்கா, இரு கட்டங்களாக வரியை உயர்த்தியுள்ளது. இதற்கு பதிலடியாக, இதே அளவிற்கு, அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு, சீனாவும் அதிக வரி விதித்துள்ளது. இந்த வகையில், இரு நாடுகளும், பரஸ்பர இறக்குமதி வரியை, 25 சதவீதம் உயர்த்தியுள்ளன.
தோல்வி :
இதையடுத்து, இரு நாடுகளும், வரி குறைப்பு தொடர்பாக, இரு முறை நடத்திய பேச்சு, தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ‘‘சீனாவின், 1.40 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு, மூன்றாம் கட்டமாக, மீண்டும் வரி உயர்த்தப்படும்,’’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த வார இறுதியில் அறிவித்தார். இதனால், அமெரிக்கா –சீனா இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமாகும் என, தெரிகிறது.
இந்நிலையில், வரி உயர்வால் அமெரிக்க பொருட்களின் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதால், அப்பொருட்களை, வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையில், சீனா இறங்கியுள்ளது. சமீபத்தில், பிரேசில் நாட்டில் இருந்து சோயாபீன் இறக்குமதியை துவக்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சீனாவுக்கு, 40க்கும் மேற்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய, இந்தியா திட்டமிட்டுள்ளது.
மாட்டிறைச்சி :
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய, திராட்சை, பருத்தி, புகையிலை, உருக்கு கொதிகலன் உள்ளிட்ட, பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆய்வு ஒன்றில், 80க்கும் அதிகமான பொருட்கள் ஏற்றுமதிக்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி, பாதாம் பருப்பு உள்ளிட்ட, 20 பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் திறன் இந்தியாவிற்கு உள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிபரங்களை, அனைத்து அரசு துறைகளுக்கும், தொழில் கூட்டமைப்புகளுக்கும் அனுப்பி, உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், சீனாவில் உள்ள இந்திய துாதரகத்திற்கு, அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், இந்திய ஏற்றுமதியாளர்களுடன், சீன வர்த்தகர்கள் பேச்சு நடத்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் மூலம், வரும் மாதங்களில், சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வாய்ப்பு உள்ளது :
அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர், பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். அவற்றில், பொருட்கள் வினியோக நடைமுறையில் முக்கிய மாற்றங்கள் நிகழும். ஒரு சில உற்பத்தி பொருட்களின் மையமாக, இந்தியா உருவெடுக்க வாய்ப்பு உள்ளது
-அமிடென்டு பலித், மூத்த ஆய்வாளர், ஐ.எஸ்.ஏ.எஸ்., சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|