பதிவு செய்த நாள்
30 ஆக2018
23:28
புதுடில்லி : ‘‘ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அடுத்த ஆண்டு, பிரிட்டனை, இந்தியா விஞ்சும்,’’ என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவர், டில்லியில், சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணைய கட்டட திறப்பு விழாவில் பேசியதாவது: இந்த ஆண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பிரான்சை விஞ்சி, ஆறாவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. அடுத்த ஆண்டு, பிரிட்டனை விஞ்சி, உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற சிறப்பை, இந்தியா பெறும்.
நாட்டின் பொருளாதாரம், ஆண்டுக்கு, 7 – -8 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. அடுத்த, 10- – 20 ஆண்டுகளில், நமக்கு மேலும் ஏராளமான வளர்ச்சி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. உதாரணமாக, நாட்டின், வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதேசமயம், கிழக்கு பகுதி இன்னும் வேகமாக வளர்ச்சி காண வேண்டும். நாட்டின் தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, பல்வேறு துறைகளில் முன்னேற்றம் காணப்படுகிறது. இது, உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் பெருக துணை புரியும்.
இத்தகைய அம்சங்கள் அடிப்படையில், 2030 -– 40ல், இந்தியா, உலகின் மிகப் பெரிய மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இடம் பெறும். சில நிறுவனங்கள், கூட்டு சேர்ந்து, பொருட்கள் விலையை செயற்கையாக உயர்த்துகின்றன. அவை, துறையில் உள்ள ஆதிக்கத்தை பயன்படுத்தி, பொருட்கள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன; போட்டித் தன்மையை நீர்த்து போகச் செய்கின்றன. இத்தகைய செயல்பாடுகளை தடுத்து, ஆரோக்கியமான சந்தையை உருவாக்கும் நடவடிக்கையில், சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|