பதிவு செய்த நாள்
30 ஆக2018
23:31
புதுடில்லி : ரிசர்வ் வங்கி, ‘சைபர் கிரைம்’ எனப்படும், கணினி சார்ந்த குற்றங்களால் பாதிக்கப்படும் வங்கி வாடிக்கையாளர்களின் டிபாசிட்டை பாதுகாப்பதற்கான விதிமுறைகளை உருவாக்கி உள்ளது.
நாட்டில், மின்னணு தொழில்நுட்பத்திலான பணப் பரிமாற்றம், வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. மொபைல் போனில் சுலபமான பணப் பரிவர்த்தனை சேவையை, ‘பேடிஎம், போன்பீ, கூகுள் பே’ போன்ற பல நிறுவனங்கள் வழங்குகின்றன. மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் வேளையில், அதற்கு அடித்தளமான கணினி ஒருங்கிணைப்பில் ஊடுருவி, நாசக்காரர்கள் செய்யும் மோசடிகளும் பெருகி வருகின்றன.
அலட்சியம் :
இத்தகைய மோசடிகளை தடுக்க, வங்கிகள் அவற்றின் கணினி ஒருங்கிணைப்பு சார்ந்த கட்டமைப்பு வசதியை பலப்படுத்தி வருகின்றன. எனினும், வாடிக்கையாளர்களின் அஜாக்கிரதை, அலட்சியம், கணினி கட்டமைப்பில் உள்ள ஓட்டைகள் போன்றவற்றால், வங்கி கணக்கில் பணம் மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இத்தகைய மோசடிகளில், வாடிக்கையாளர்களின் பொறுப்பை வரையறுக்கும் விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கி கணக்கில் நடைபெற்ற மோசடி குறித்து, மூன்று நாட்களுக்குள் புகார் அளித்தால், அந்த இழப்பிற்கு வாடிக்கையாளர் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டார். இது, வங்கியின் கணினி குளறுபடிகளால், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இழப்பிற்கும் பொருந்தும்.
வங்கியின் கணினி குறைபாடுகளால், தங்கள் கணக்கில் அங்கீகாரமின்றி பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருந்தால், அது குறித்து, வாடிக்கையாளர்கள், 4 – -7 நாட்களுக்குள் புகார் அளிக்க வேண்டும். இதில், வங்கி கணக்கின் தன்மை, மோசடி நடைபெற்ற இடம் ஆகியவற்றை பொறுத்து, வாடிக்கையாளர்களுக்கு உள்ள பொறுப்பு, 5,000 – 25 ஆயிரம் ரூபாய் வரை தான் என, வரையறுக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் குழு :
அங்கீகாரமற்ற முறையில் நடைபெற்ற பரிவர்த்தனையால், வாடிக்கையாளர் இழந்த பணத்தை, வங்கிகள், 10 நாட்களுக்குள், அவர்களின் கணக்கில் செலுத்த வேண்டும். வங்கி கணக்கில் மோசடி நடைபெற்று, ஒரு வாரத்திற்கு பின், புகார் அளித்தால், அது குறித்த முடிவை, வங்கி இயக்குனர் குழு எடுக்க வேண்டும். பண மோசடி நடைபெற்ற, 90 நாட்களுக்குள், அதற்கான பொறுப்பை யார் ஏற்பது என்பது குறித்த விசாரணையை, வங்கி இயக்குனர் குழு முடிக்க வேண்டும்.
மோசடி நபர்களிடம் வங்கி கணக்கு எண், ‘டெபிட், கிரெடிட் கார்டு’ விபரங்கள் போன்றவற்றை அளித்து, பணத்தை இழக்கும் வாடிக்கையாளர்களின் செயல்களுக்கு, வங்கிகள் பொறுப்பேற்காது. மேற்கண்ட விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான காலவரையறை எதையும், ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை.
----
மோசடி புகார் கொடுக்கும் காலம் - வாடிக்கையாளரின் பொறுப்பு
----
3 வேலை நாட்களுக்குள் - எதுவும் இல்லை
4- – 7 வேலை நாட்களுக்குள் - 5,000 – 25,000 ரூபாய் வரை
7 வேலை நாட்களுக்கு மேல் - வங்கி இயக்குனர் குழு கொள்கை சார்ந்த முடிவு
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|