பதிவு செய்த நாள்
03 செப்2018
00:29
காலம், மாற்றங்களை ஏற்படுத்தும் இயல்புடையது. மதிப்புசார் முதலீட்டில் நிகழ்ந்த மாற்றம் அனைத்துமே, காலத்தின் தேவைகள் சார்ந்தே நடந்தன.
தேவைகள் ஏற்படுத்திய மாற்றங்கள், ஆய்வுக்குப் பின் ஏற்புடையதாகி, காலப்போக்கில் வழிமுறையாகவும், கல்வி முறையாகவும் மாறியது. இதுவே, மதிப்புசார்முதலீட்டின் வரலாறு.இந்த வரலாற்றில் ஓர் இடமும், இரு நபர்களும் மிக முக்கிய பங்கு ஆற்றினர் என்றால் அது மிகையல்ல.
கொலம்பியா பல்கலைக்கழகம் அந்த முக்கிய இடத்தை தொடர்ந்து வகிக்கிறது. 88 வயதாகும் வாரன் பபட்டும், அவரது வாழ்நாள் நண்பரான, சார்லி முங்கரும், அந்த இரு நபர்கள்.பொதுவாக கல்வி நிறுவனங்கள், காலத்தோடும், மாற்றங்களோடும் சார்ந்து இயங்குவதில்லை என்ற கூற்றுக்கு விதிவிலக்கு, கொலம்பியா பல்கலைக் கழகம்.தொழில் முறையோடு தொடர் பிணைப்பில் இந்த பல்கலைக்கழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.
ஒரு முக்கிய நிகழ்ச்சியை இங்கு நினைவுகூரவேண்டும். அதற்கு இந்திய தொடர்பும் இருக்கிறது. புரூஸ் கிரீன்வால்ட் என்ற பேராசிரியர், கடந்த காளைச் சந்தையின் உச்சத்தில், மும்பை வந்தார். சந்தை உச்சத்தில் இருந்த தினமான, ஜனவரி 21, 2008 அன்று, இந்தியாவின் முக்கிய முதலீட்டாளர்களின் மத்தியில் உரையாற்றினார்.
அந்த உரையில், ‘எனக்கு இந்திய பங்குகளின் மதிப்பு, மிகவும் அதிகமாக தோன்றுகிறது; எதையும் வாங்கும் விருப்பமில்லை’ என, தெளிவாக சொன்னார்.அற்புதமான அந்த உரையில், ஒரு கல்வியாளர், எப்படி தொழில் புரிவோரிடம் உரையாட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டினார். படிப்பறிவும், பட்டறி வும் இணைந்து இயங்கும் நேரங்கள் பலரை காப்பாற்றும் என்றால், அதுவே ஒரு கல்வி முறையின் வெற்றி. மதிப்புசார் முதலீட்டில், கொலம்பியா பல்கலைக்கழகம் அதை தொடர்ந்து செய்து வருகிறது.
பபட், -முங்கர் ஆகிய இரு மனிதர்களின் பங்கும் மிக அபாரமானது. அவர்கள், உலகிற்கு மதிப்புசார் முதலீட்டை கற்பித்த முறை, அந்த கல்வி ஏற்படுத்திய தாக்கம், வரலாற்று சிறப்பு உடையது.அதை, அவர்கள் செய்த விதம் வரலாற்று தன்மை பெற்றுவிட்டது.
அவர்கள் இதை செய்ய, தங்கள் நிறுவனமான, ‘பெர்க்ஷயர் ஹாத்வே’யின் ஆண்டு அறிக்கை மடலை உருவாக்கினர். இந்த ஆண்டு மடல், முதலில், 1965ல் எழுதப்பட்டது. கடந்த, 53 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதப்பட்ட இந்த அறிக்கைகள், உலக அளவில் முதலீட்டு பாடங்களாக மாறிவிட்டன.
ஆண்டுக் கூட்டத்திற்கு முன், இந்த அறிக்கையை வாசித்துவிட்டு, அந்த கூட்டத்திற்கு யாத்திரை சென்று, அவர்களிடம் கேள்வி கேட்பதை, முதலீட்டாளர்கள் ஒரு பழக்கமாக்கி விட்டனர்.மே மாதத்தின் முதல் வார இறுதியில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு, கிட்டத்தட்ட, 40 ஆயிரம் பேர், உலகின் அத்தனை மூலைகளில் இருந்தும் செல்கின்றனர்.
இந்த ஆண்டு சீனாவில் இருந்து, 4,000 பேர்; அதுவும், மாணவர்கள் யாத்திரை செல்கின்றனர் என்றால் பாருங்கள்.இவர்கள் இருவரும் எழுதிய அத்தனை ஆண்டு மடல்களையும் படித்து விட்டால், மதிப்பு சார் முதலீடு பற்றி ஒருவர் தம் அறிவை வளர்த்துக் கொள்ள முடியும் என்பது, பெருவாரியான சீன முதலீட்டாளர்களின் நம்பிக்கை.சீன மொழியாக்கம் செய்யப்பட்டு, இவை பல்கலைக்கழக பாடமாககற்பிக்கப்படுகின்றன.
கேள்வி முறை கல்வி, மதிப்புசார் முதலீட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்க, இவ்விருவரின் பங்கு மிக முக்கியம். ஐம்பது ஆண்டு களாக தாம் கற்றதை பிறருடன் பகிர்ந்து கொண்ட அபாரமான முறை, கல்விக்கே சிறந்த உதாரணங்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|