பதிவு செய்த நாள்
03 செப்2018
00:33
அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2018 இரண்டாம் காலாண்டில், 4.2 சதவீத அளவுக்கு வளர்ந்துள்ளதுஎன்ற செய்தி, பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அவ்வளவு பெரிய பொருளாதாரம், எப்படி இவ்வளவு வேகமாக வளர்கிறது? உண்மையிலேயே டிரம்ப், மேஜிக் ஏதேனும் நடக்கிறதா?அப்படி நடப்பதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் தெரிவிக்க, ‘இல்லை இது சும்மா குமிழ் தான், சீக்கிரம் வெடித்துவிடும்’ என, எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றபோது, அமெரிக்காவில், 3 சதவீத வளர்ச்சியை கொண்டு வருவேன் என, சபதம் போட்டார். அது, தேர்தல் நேரப் பேச்சு, உண்மையாக முடியாது என, வாதிட்டவர்கள் உண்டு.ஆனால் தற்போது, 2018ம் ஆண்டின் ஏப்ரல், மே, ஜூன் காலாண்டின், ஜி.டி.பி., எண்கள் திருத்தப்பட்டுள்ளன. முதலில், 4.1 சதவீதமாக அறிவிக்கப்பட்ட, ஜி.டி.பி., தற்போது, 4.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல் காலாண்டில், அந்நாட்டின், ஜி.டி.பி., 2.2 சதவீதமாக இருந்தது.இதனோடு சேர்ந்து இன்னும் இரண்டு தரவுகளையும் பார்த்துவிடுவோம்.அமெரிக்காவில் தற்போது வேலையற்றோர் விகிதம், 3.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2008 ஜூலையில், 5.8 சதவீதமாக இருந்த வேலையற்றோர், மேன்மேலும் அதிகரித்து, 2012 ஜூலை மாதம், 8.2 சதவீதமாக உயர்ந்தனர்.
அந்த நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தற்போது வேலையற்றோர் எண்ணிக்கை பல மடங்கு குறைந்துள்ளது.இன்னொரு தரவு, நுகர்வோரின் நம்பிக்கை. உலகிலேயே அமெரிக்கா தான் நுகர்வோரின் சொர்க்கம்.அங்கே பொருட்களை வாங்கிக் குவிப்பதும், அதற்காகச் செலவிடுவதும், கடன் வாங்குவதும், அந்தக் கடனைச் செலுத்துவதற்காக கூடுதலாக உழைப்பதும், அவர்களுடைய இயல்பான பண்பு. நுகர்வோர், செலவு செய்ய வில்லை எனில், ஏதோ பிழை என்று அர்த்தம்.
அந்த வகையில் பார்க்கும்போது, ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் நம்பிக்கை பெருமளவு உயர்ந்துள்ளதாக, அந்த நாட்டில் வெளியாகியுள்ள கணிப்பு ஒன்று கூறுகிறது.அதாவது, தைரியமாகப்பொருட்களை வாங்கு கின்றனர் என்றால்,துணிச்சலோடு கடன் வாங்கத் தயாராக இருக்கின்றனர் என்று அர்த்தம்.
கடன் வாங்கத் தயார் என்றால், நிச்சயம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளும், போதிய வருவாயும் இருப்பதாக அர்த்தம்.இந்த மூன்று அலகுகளையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால், அமெரிக்காவில் டிரம்ப் ஏதோ மாயாஜாலம் செய்துகொண்டிருக்கிறார் என்றே புரிகிறது. அது என்ன?
அதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவை, கொள்கை மாற்றங்கள், கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், வரிச் சலுகைகள். பின்வரும் விஷயங்கள் நேரடியாக, ஜி.டி.பி., வளர்ச்சிக்கு உதவியுள்ளன.
சென்ற காலாண்டில், அமெரிக்காவின் ஏற்றுமதிகள் பெருமளவு உயர்ந்துள்ளன. மொத்த, ஜி.டி.பி.,க்கு பங்களிக்கும் விதத்தில் அந்நாட்டின் ஏற்றுமதிகள், 9.3 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளன. அதனால், அந்நாட்டுக்கு கிடைத்துள்ள வரவு அதிகமாகியுள்ளது.
ஏன் இந்த திடீர் ஏற்றுமதி உயர்வு?
இது இயல்பானது அல்ல. மாறாக, சீனா மீதும், இதர நாடுகள் மீதும், அமெரிக்கா, பல பொருட்களுக்கு விதித்துள்ள வரிகள் அமலுக்கு வருவதற்கு முன், அவசர கதியில் செய்யப்பட்ட ஏற்றுமதிகள் என்று விளக்கம் கொடுக்கின்றனர், அங்குள்ள பொருளாதார நிபுணர்கள்.ஆக இது, ‘ஒன் டைம் வொண்டர்!’ அடுத்த காலாண்டில், இப்படிப்பட்ட வளர்ச்சியை ஏற்றுமதி துறை பெற வாய்ப்பில்லை என்பது எதிர்வாதம்.
இரண்டாவது அம்சம், மீண்டும் அமெரிக்காவில் புதிய தொழிற்சாலைகள் துவங்கப்படுகின்றன. டிரம்ப் இதை தன் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்களித்து இருந்தார். அதாவது, அங்கே தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருப்பதையே இந்த முயற்சிகள் காட்டுகின்றன.அதாவது, பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டதால், அங்கே தொழில் முதலீடுகள் உயர்ந்துள்ளன. 7.3 சதவீத அளவுக்கு இந்த முதலீடுகள் பெருகியுள்ளன. இதனால், வளர்ச்சி உருவாகி வருகிறது என்று வாதம் வைக்கப்படுகிறது.
அமெரிக்க, ஜி.டி.பி.,க்கு பங்களிக்கும் மற்றொரு அம்சம், அந்நாட்டின் வீடுகளின் மீதான முதலீடு. இரண்டாம் காலாண்டு, ஜி.டி.பி., வளர்ச்சிக்கு ஹவுசிங் துறை, 12 சதவீதம் உதவியிருக்கிறது. மக்களுக்கு புது வீடுகளை வாங்குவதற்கான நம்பிக்கை பிறந்திருப்பதாலே தானே, இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்ற வாதமும் வைக்கப்படுகிறது.
உண்மையில், 4.2 சதவீத வளர்ச்சி என்பது, எல்லோரையும் ஆச்சரியம் மட்டுமல்ல, கலவரப்படுத்தியும் உள்ளது. இதை எப்படி புரிந்துகொள்வதுஎன்பதில் தான் குழப்பம்.வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும், சென்ற ஆண்டில் இருந்த அளவில் தான் சம்பளங்கள் உள்ளன. ஆண்டுதோறும் மிகச் சாதாரணமாக உயர வேண்டிய அளவுக்குக் கூட சம்பளங்கள் உயரவில்லை.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது சம்பளம், 1.2 சதவீத அளவிலேயே உள்ளது. மேலும், பலரும் பகுதி நேர வேலைகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் முழுநேர வேலைக்குச் செல்லவே விருப்பம். ஆனால், தற்போதைக்கு பகுதி நேர வேலைவாய்ப்பே கிடைத்து வருவது ஒரு பெரிய துரதிர்ஷ்டம்.
பிற நாடுகள் மீது, அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரிகளால், சர்வதேச அளவில், ‘வர்த்தகப் போரே’ உருவாகியுள்ளது. வர்த்தகத்தையே ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தி வருபவர் டிரம்ப். அப்படி இருக்கும்போது, இனி வரும் காலாண்டுகளில் எப்படி ஏற்றுமதிகளை அதிகரிக்க முடியும்?
அமெரிக்கா விதித்த கெடுபிடியான வரிகளுக்கு எதிர்வினையாக, பல நாடுகளும் அமெரிக்கப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்துள்ளன. குறிப்பாக, ஏட்டிக்குப் போட்டியாக சீனா செயல்பட்டுக் கொண்டே வருகிறது. இதனால், எதிர்காலத்தில் அமெரிக்கா தான் அதிகம் பாதிக்கப்படப் போகிறது.
நுகர்வோர் நம்பிக்கை உயர்ந்திருப்பது உண்மை தான். ஆனால், அவர்களுடைய சேமிக்கும் பழக்கமும் அதிகரித்துள்ளதாக மற்றொரு ஆய்வு கூறுகிறது. 2005ல், 1.9 சதவீதமாக இருந்த சேமிப்புகள் தற்போது, 3.2 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது, அவர்கள் கடன் வாங்கத் தயங்குகின்றனர். எதிர்காலம் இதேபோன்று இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. எதிர்காலத்தை மனதில் கொண்டு சேமிக்கின்றனர்.
மொத்தத்தில், தற்போதைய, 4.2 சதவீத உயர்வு என்பது ஒரு குமிழ் தான். இதே வேகத்தில், அடுத்தடுத்த காலாண்டுகளில் வளர்ச்சி இருக்கப் போவதில்லை.அமெரிக்காவால் ஏற்படக்கூடிய பாதிப்பையே, உலகம் அதிகம் சந்திக்கப் போகிறது என்பது தான் உண்மை.
ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|