பதிவு செய்த நாள்
04 செப்2018
00:18
ஈரோடு:ஆவின் பால் பவுடர் விலை குறைந்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு ஆவின் நெய்யை அனுப்ப உரிமம் பெற முயற்சி செய்து வருகின்றனர்.ஈரோடு ஆவின் மூலம் தினமும், 3.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 1.70 லட்சம் லிட்டர் பால், சென்னை, கேரளா மற்றும் உள்ளூர் தேவைக்காக விற்பனை செய்யப்படுகிறது.
மீதமுள்ள பால் மூலம், தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா, இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம், ரோஸ்மில்க் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.தற்போது, ஈரோடு ஆவின் பால் பவுடர் பல்வேறு மாநிலங்களில், அதிக அளவில் விற்பனை செய்யப்படும் நிலையிலும், அதன் விலை குறைந்து உள்ளது.இதுபற்றி, ஈரோடு ஆவின் பொது மேலாளர் லதா கூறியதாவது:ஈரோடு ஆவினில் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன், 1,850 டன் வரை பால் பவுடர் இருப்பு இருந்தது. பல்வேறு மாநிலங்களில், ஈரோடு ஆவின் பால் பவுடர்விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், தற்போது, 850 டன் மட்டும் கையிருப்பில் உள்ளது.சேலம் ஆவின் ஒன்றியத்தில், 1,450 டன் வரை, பால் பவுடர் இருப்பில் உள்ளது.முன்பு பால் பவுடர் ஒரு கிலோ, 210 ரூபாய் வரை, விற்பனையானது. தற்போது, 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வரும் தீபாவளிக்கு, ‘சுகர்லெஸ், சுகர்பிரீ பால்கோவா’ தயாரித்து விற்க உள்ளோம். தற்போது, குறைந்த அளவில் அதேபோன்ற பால்கோவா தயாரித்து, விற்பனை செய்கிறோம்.சேலம் ஆவின் ஒன்றியம் மூலம், சிங்கப்பூர், மலேஷியா, ஹாங்காங் போன்ற நாடுகளில், ஆவின் கிளை திறக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு ஆவின் ஒன்றியம் மூலம், சிங்கப்பூர், மலேஷியா, ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு நெய் அனுப்ப உள்ளோம்.அதற்காக, ஏற்றுமதிக்கான உரிமம் பெற விண்ணப்பித்துள்ளோம். அடுத்த மாதம் உரிமம் வந்ததும், இம்மூன்று நாடுகளுக்கும் நெய் அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|