பதிவு செய்த நாள்
04 செப்2018
00:31
புதுடில்லி:''நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைய, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் செயல்படுத்திய கொள்கைகளே காரணம்,'' என, 'நிடி ஆயோக்' துணை தலைவர் ராஜிவ் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:பிரதமர் மோடி, 2014ல் மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.2 சதவீதமாக இருந்தது. இது, தயாரிப்பு, வேளாண் துறைகளின் உற்பத்தி வளர்ச்சியால், 2015- - 16ம் நிதியாண்டில், 7.6 சதவீதமாக உயர்ந்தது. எனினும், ஜன., - மார்ச் வரையிலான, கடைசி காலாண்டில் குறையத் துவங்கிய வளர்ச்சி விகிதம், அடுத்த, ஆறு காலாண்டுகளாக தொடர்ந்து சரிவடைந்து வந்தது.
இதற்கு, 2016, நவ., 8ல் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணம் அல்ல.இதற்கு,2013, செப்., 5 முதல் 2016, செப்., 4 வரை, ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த, ரகுராம் ராஜன் தான் காரணம். அப்போது, ரிசர்வ் வங்கி, வங்கிகளின் இடர்பாட்டு கடனையும், வாராக் கடனையும் அடையாளம் காண, புதிய வழிமுறைகளை உருவாக்கியது.
பாதிப்பு
இதன் காரணமாக, தொழில் நிறுவனங்கள், வங்கிகளில் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, சிறிய நிறுவனங்கள் பாதிப்பிற்கு ஆளாயின. வங்கிகளின் கடன் வளர்ச்சி குறைந்தது.பெரிய நிறுவனங்களுக்கான கடன் வளர்ச்சி, 1.5 -- -2 சதவீதமாக சரிவடைந்தது. ஒரு சில காலாண்டுகளில், வளர்ச்சியில் பின்னடைவும் ஏற்பட்டது.இது, இந்திய வர்த்தகத் துறை வரலாற்றில் மிகப் பெரிய சரிவாகும். நாடு, இதுபோன்ற தொடர் சரிவை சந்தித்ததில்லை. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக் கடன் பெருமளவு உயர்ந்தது. ஏற்கனவே வாங்கியக் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதன் காரணமாக, 2015- - 16ம் நிதியாண்டில், 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்த, வங்கித் துறையின் வாராக் கடன், 2017, மத்தியில், 10.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.இதுதான், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைய, அடிப்படை காரணம்.
நிதி ஒதுக்கீடு
இத்தகைய சூழலை சமாளிக்கும் நோக்கில், மத்திய அரசு, பல்வேறு அரசுத் திட்டங்களுக்கானநிதி ஒதுக்கீட்டை அதிகரித்தது.இதன் விளைவாக, 2017- - 18ம் நிதியாண்டின், ஜூலை - செப்., காலாண்டு முதல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது.நடப்பு, 2018--19ம் நிதியாண்டின், ஏப்., - ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இரண்டு ஆண்டுகளுக்கு பின், ஒரு காலாண்டில் காணப்படும் அதிகபட்ச வளர்ச்சியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
பொருளாதார வளர்ச்சி குறைய, பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணம் அல்ல. உயர்மதிப்பு கரன்சிகளில், 13 ஆயிரம் கோடி ரூபாய், திரும்ப வரவில்லை என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில், வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்த, 23 ஆயிரத்து, 942 கோடியும் சேர்ந்தால், 36 ஆயிரத்து, 942 கோடி ரூபாய் ஆகிறது. மொத்தத்தில், மேலும், 1.50 லட்சம் கோடி ரூபாய், பொருளாதாரத்திற்கு திரும்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ராஜிவ்குமார், துணை தலைவர், 'நிடி ஆயோக்'
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|