பதிவு செய்த நாள்
07 செப்2018
00:06
ஈரோடு:உற்பத்தி அதிகரித்துள்ளதால், பட்டுக்கூடு விலை, கிலோவுக்கு, 50 ரூபாய் வரை குறைந்துள்ளது.
ஈரோடு சுற்று வட்டாரத்தில், ௩,200 ஏக்கரில், மல்பெரி சாகுபடி செய்து, பட்டுக்கூடு உற்பத்தி நடக்கிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, பரவலாக மழை பெய்கிறது. இதனால், மல்பெரி வளர்ச்சி, பட்டுக்கூடு உற்பத்தி அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு, ஈரோடு பகுதியில், 960 டன் பட்டுக்கூடு உற்பத்தியானது. இதில், 880 டன் வெள்ளை பட்டுக்கூடு; மற்றவை மஞ்சள் நிறமாகும். நடப்பாண்டில் தற்போதே, பெரும்பாலான பகுதிகளில் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இரண்டு மாதங்களுக்கு முன், 400 முதல், 420 ரூபாய் வரை விற்ற, 1 கிலோ வெள்ளை பட்டுக்கூடு, நடப்பு வாரம், 359 ரூபாயாக குறைந்துள்ளது. மஞ்சள் பட்டுக்கூடு, 390ல் இருந்து, 325 ரூபாயாக சரிந்துள்ளது. சராசரியாக, 1 கிலோவுக்கு, 50 முதல், 60 ரூபாய் வரை சரிந்துள்ளது.
இது குறித்து, ஈரோடு பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் (பொறுப்பு), முருகன் கூறியதாவது:தற்போது மழையால், நிலத்தடி நீர் அதிகரித்து, மல்பெரி மற்றும் பட்டுக்கூடு வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் வரத்து அதிகரித்து, விலை குறைகிறது. இருப்பினும், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படாது.
கடந்தாண்டு, மாநில அளவில் உற்பத்தியில், உடுமலைபேட்டை முதலிடம், ஈரோடு மாவட்டம் இரண்டாமிடம், நாமக்கல் மாவட்டம் மூன்றாமிடம் வகித்தன. தற்போதைய நிலையில், ஈரோடு மாவட்டத்தில், 1 ஏக்கருக்கு சராசரியாக, 80 முதல், 95 கிலோ வரை பட்டுக்கூட்டை உற்பத்தி செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|