பதிவு செய்த நாள்
07 செப்2018
00:15
புதுடில்லி:விதிமுறைகளை பின்பற்றாமல் உள்ள, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் உரிமங்களை, ரிசர்வ் வங்கி ரத்து செய்து வருகிறது.
நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், ஏப்., – ஆகஸ்ட் வரை, 392 வங்கி சாரா நிதி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இதில், கடந்த இரண்டு மாதங்களில், மிக அதிகமான நிறுவனங்கள் மூடுவிழா கண்டுள்ளன.இது தவிர, 79 வங்கி சாரா நிதி நிறுவனங்கள், உரிமங்களை திரும்ப அளித்துள்ளன.
நோக்கம்
இது குறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2014 முதல், ரிசர்வ் வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்கி வருகிறது.இந்நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் முதலீடுகளுக்கு பாதிப்பில்லாத வகையில், வலுவான நிதியாதாரங்களை கொண்டிருக்க வேண்டும் என்பது தான், ரிசர்வ் வங்கியின் நோக்கம்.
அதன்படி, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், 2016 மார்ச் முதல், குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் சொந்த மூலதனத்தை பராமரித்து வர வேண்டும்; இதை, 2017 மார்ச் முதல், இரண்டு கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
மேலும், 2016 மார்ச்சில், பங்கு மூலதனத்தை, 8.5 சதவீதமாக உயர்த்தி, 2018 மார்ச்சில், 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.வங்கிகளை போல, தவணை செலுத்த தவறுவோரின் கணக்கை, 90 நாட்களுக்கு பின், வாராக் கடன் பட்டியலில் சேர்க்குமாறும் ரிசர்வ் வங்கி கூறியது.
அவகாசம்
இந்த விதிமுறைகளை பின்பற்ற, ரிசர்வ் வங்கி ஓராண்டு கூடுதலாக அவகாசமும் அளித்தது. இந்த அவகாசம், மார்ச்சுடன் முடிந்த நிலையில், விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது, ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் காரணமாக, 392 வங்கி சாரா நிதி நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தவிர, போதுமான நிதியாதாரம் இல்லாத பல நிறுவனங்கள், உரிமத்தை ஒப்படைத்து வருகின்றன.
வங்கி சாரா நிதி துறையில், கடந்த சில ஆண்டுகளாக, நுகர்வோர் கடன் பிரிவின் வளர்ச்சி, பாரம்பரிய வங்கிகளை விஞ்சும் அளவிற்கு அதிகரித்துள்ளது.அதற்கேற்ப, நிறுவனங்களின், சொத்து மதிப்பும் உயர வேண்டும். அதனால், ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
வாராக் கடன் குறைந்தது
கடந்த நிதியாண்டில், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வர்த்தகம், 22 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடன் வளர்ச்சி, 14.6 சதவீதத்தில் இருந்து, 21 சதவீதமாக அதிகரித்துள்ளது. மொத்த வாராக் கடன், 6.1 சதவீதத்தில் இருந்து, 5.8 சதவீதமாக குறைந்துள்ளது.
இதயம் போன்றது
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதால், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் துறையை, பொருளாதாரத்தின் இதயம் என, வர்ணிக்கலாம். இத்துறை சீர்குலைந்தால் அது, பொருளாதாரத்தின் இதர பிரிவுகளை பாதிக்கும்அருண் சிங், தலைமை பொருளாதார வல்லுனர், ‘டன் அண்டு பிராட்ஸ்டிரீட்’
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|