பதிவு செய்த நாள்
17 செப்2018
00:14
பொதுவாக, பொருளாதார சூழல்கள் தொடர்ந்து மாற்றங்களை சந்திப்பது என்பது இயல்பு. அப்படி ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டு அணுகுமுறைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, அரசின் நிதிப் பற்றாக்குறை மாற்றங்கள், ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் உள்ள இடைவெளி ஆகியவை தொடர்பான குறியீடுகள், மிகவும் முக்கியமானவை.
பங்குச் சந்தை முதலீடுகளுக்கும், இந்த குறியீடுகளுக்கும் ஆழ்ந்த தொடர்பு உள்ளது. ஆனால், இந்த தொடர்பு பலருக்கும் முக்கியமானதாக படுவதில்லை. அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காததால், பல முதலீட்டு தவறுகள் ஏற்படுகின்றன. இந்த அடிப்படை தவறு, நீண்ட முதலீட்டு தவறுகளுக்கு வித்திடும். அத்தகைய தவறுகள் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு முதலீட்டாளரும், தங்களுடைய முதலீடுகளை இப்போது, மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். உருவாகும் சூழலுக்கு ஏற்ப, அவற்றை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
ரூபாய் மதிப்பு, கச்சா எண்ணெய், நிதிப் பற்றாக்குறை மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றில் ஏற்படும் அதிவேக மாற்றங்கள், ஒவ்வொரு நிறுவனத்தையும் எந்த வகையில் பாதிக்கும் என்பதை, ஆய்வின் நோக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யப்படும் ஆய்வுகள், முதலீட்டு மாற்றங்களின் தேவைகளை நமக்கு உணர்த்தும். அந்த தேவைகளை நிறைவு செய்யும் பொறுப்பு, ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் இருக்கிறது. தொடர்ந்து எடுக்கப்படும் முடிவுகள் மூலமாக, தேவையான முதலீட்டு மாற்றங்களை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம் அரசு, ரூபாய் மதிப்பு சரிவை தடுக்கும் நோக்கோடு தற்போது களம் இறங்கி உள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து, டாலரை திரட்ட, திட்டங்கள் தீட்டப்படுகின்றன. வட்டி விகிதமும் உறுதியாக கூடும் என்றே தோன்றுகிறது. மேலும், இந்திய உற்பத்தி நிறுவனங்கள், வெளிநாட்டில் இருந்து நேரடியாக கடன் பெற அனுமதி வழங்கப்பட உள்ளது.இந்த முடிவுகள், பல நிறுவனங்களுக்கு நன்மையை விளைவிக்கும். ரூபாயின் மதிப்பு, ஒரு புதிய இடத்தில் நிலைப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.
ரூபாயின் இந்த புதிய மதிப்பு, இறக்குமதி சார்ந்த பல நிறுவனங்களை பாதிக்கக் கூடும். அவற்றின் செலவுகள் கூடலாம். அதிக கடன் வைத்திருக்கும் நிறுவனங்களும் பாதிக்கப்படும். எகிறும் வட்டி விகிதங்கள் அவற்றை அவசியம் பாதிக்கும். மாறாக, கடனற்று இயங்கும் ஏற்றுமதி தொழில் கள், செழிப்பான காலங்களை சந்திக்க நேரிடும். அவர்களின் லாப வளர்ச்சி மீண்டும் முதலீட்டாளர் கவனத்தை ஈர்க்கும். இறக்குமதி தடுப்பு நடவடிக்கைகளும், பல இந்திய உற்பத்தி நிறுவனங்களுக்கு பலன் தரும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த ஆண்டில், பல பொருளாதார நிகழ்வுகளையும், மாற்றங்களையும் முதலீட்டாளர்கள் சந்திப்பது உறுதி. இவற்றை நிதானமாக எதிர்கொள்வது அவசியம். முன்னெச்சரிக்கையுடன் இவற்றை அணுகும் முதலீட்டாளர்கள், வருங்கால வெற்றி நோக்கி பயணிப்பர். முதலீட்டு முடிவுகளை, வருங்காலம் சார்ந்து எடுத்ததன் பலன்கள், அவர்களுக்கு பெரிதும் சாதகமாக நிற்கும்.ஆனால், தற்கால சிந்தனைகளில் மூழ்கி, சிக்கி இருக்கும் முதலீட்டாளர்கள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் எடுப்பதை கோட்டை விட்டு விடக்கூடும். இழந்த வாய்ப்புகள், அவர்களுக்கு மீண்டும் திரும்பாது.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|