பதிவு செய்த நாள்
19 செப்2018
23:39
சென்னை : ‘‘இந்தியாவில், முதலீடு செய்ய விரும்பும் மாநிலங்களில், அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழகம் முன்னோடியாக உள்ளது,’’ என, தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர், பெஞ்சமின் தெரிவித்தார்.
இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில், எம்.எஸ்.எம்.இ., எனும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.
இதில், தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர், பெஞ்சமின் பங்கேற்று பேசியதாவது: தமிழகம் தொழில் வளம் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் மாநிலங்களில், தமிழகம் முன்னோடியாக உள்ளது. தமிழகத்தில் உலக தரம் வாய்ந்த கட்டமைப்புகள், தொழில்நுட்பங்கள், துடிப்பான தொழில்முனைவோர்கள் மற்றும் சிறந்த தொழிலாளர்கள் உள்ளனர்.
தமிழகம், எம்.எஸ்.எம்.இ., துறையில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில், 18 லட்சம் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இதன் மூலம், 1.15 கோடி வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு, 25 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்தால், 25 லட்சம் வரை மானியம் கிடைக்கும். இது போன்று, எம்.எஸ்.எம்.இ.,க்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்குகிறது.
தொழில் துவங்க இணையதளம் வழியாக எளிதில் அனுமதி பெறும் வகையில், ‘ஒற்றைச் சாளர முறை’ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், விண்ணப்பித்த, 125 நிறுவனங்களில், 80 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், 240 கோடி ரூபாய் வரை முதலீடு பெறப்பட்டு உள்ளது. மேலும், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்காக, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், நில வங்கி உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், எம்.எஸ்.எம்.இ., துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் தமிழக தலைவர், பொன்னுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|