பதிவு செய்த நாள்
27 செப்2018
06:11
புதுடில்லி : சர்க்கரை துறைக்கான, 5,538 கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, நேற்று ஒப்புதல் வழங்கியது.
இக்குழுவின் கூட்டம்,டில்லியில், மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. அதில், கரும்பு விவசாயிகளின், 13 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைக்கு தீர்வு காணவும், உபரி சர்க்கரை இருப்பை கையாளவும், மத்திய உணவு அமைச்சகம் அளித்த, 5,538 கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டத்திற்கு, ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதில், உபரி சர்க்கரை உற்பத்திக்காக, கரும்பு விவசாயிகளுக்கு, உற்பத்தி ஆதரவு திட்டத்தின் கீழ், 4,163 கோடி ரூபாய் வழங்கப்படும். சர்க்கரை ஆலைகளின் போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்களுக்கு, 1,375 கோடி ரூபாய் அளிக்கப்படும். இத்திட்டம், 2018 -– 19ம் ஆண்டில், அக்., – செப்., சந்தை பருவத்தில் அமலுக்கு வர உள்ளது. இதனால், கரும்பு விவசாயிகளின் நிலுவை, சர்க்கரை ஆலைகளின் நிதி நெருக்கடி ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உபரி உற்பத்தி :
நாட்டின் சர்க்கரை தேவையை விட, அதன் உற்பத்தி அதிகமாக உள்ளது. அதேசமயம், சர்வதேச சந்தையில், சர்க்கரை விலை குறைவாக உள்ளது. இதனால், சர்க்கரை ஆலைகள், ஏற்றுமதியில் ஆர்வம் காட்டாமல் உள்ளன. அவை, கரும்பு விவசாயிகளுக்கு, 22 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை வைத்திருந்தன. இதையடுத்து, மத்திய அரசு, கடந்த ஜூன் மாதம், சர்க்கரை துறைக்கு, 8,500 கோடி ரூபாய் ஊக்கச்சலுகை திட்டத்தை அறிவித்தது.
அதன்படி, சர்க்கரை ஆலைகளின், எத்தனால் உற்பத்திக்கு, வட்டி சலுகையுடன், 4,400 கோடி ரூபாய் கடன்; கரும்பு விவசாயிகளுக்கு, உற்பத்தி ஆதரவு விலையாக, 1 குவின்டாலுக்கு, 5.50 ரூபாய் வீதம், 1,540 கோடி ரூபாய் அளிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிலுவைக்கு தீர்வு :
இந்நிலையில், சர்க்கரை துறைக்கு, இரண்டாம் கட்டமாக, ஊக்கச் சலுகை திட்டம் அமலுக்கு வர உள்ளது. இதனால், ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு, எஞ்சிய, 13,500 கோடி ரூபாய் நிலுவையை வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஊக்குவிப்பு :
திட்டத்தில், வரும் சந்தை பருவத்தில், கரும்பு விவசாயிகளின் உற்பத்தி ஆதரவு தொகை, இரு மடங்காக உயர்த்தப்பட்டு, 1 குவின்டாலுக்கு, 13.88 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தொகை, தற்போதைய நடைமுறைப்படி, சர்க்கரை ஆலைகள் மூலம், கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கில், நேரடியாக வரவு வைக்கப்படும்.
ஏற்றுமதி :
இது தவிர, குறைந்தபட்ச ஏற்றுமதி திட்டத்தின் கீழ், ஆலைகள் ஏற்றுமதி செய்யும், 50 லட்சம் டன் சர்க்கரைக்கு, உள்நாட்டு சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை, அரசே ஏற்றுக் கொள்ளும். இதன்படி, கடலோர மாநிலங்களில், துறைமுகத்தில் இருந்து, 100 கி.மீ.,க்குள் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு, டன்னுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படும். 100 கி.மீ.,க்கு மேற்பட்ட துாரத்தில் உள்ள ஆலைகளுக்கு, 2,500 ரூபாய் தரப்படும்.
இதர மாநிலங்களில் உள்ள ஆலைகளுக்கு, 1 டன் சர்க்கரைக்கு, 3,000 ரூபாய், சரக்கு போக்குவரத்து செலவாக வழங்கப்படும் என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சர்க்கரை உற்பத்தி :
நடப்பு செப்டம்பருடன் முடியும், 2017- – 18ம் சந்தை பருவத்தில், சர்க்கரை உற்பத்தி, 3.20 கோடி டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டில், சர்க்கரை நுகர்வு, ஆண்டுக்கு, 2.60 கோடி டன்னாக உள்ளது. இதனால், முந்தைய கையிருப்புடன் சேர்த்து, சர்க்கரை இருப்பு, 1 கோடி டன்னாக உயரும். வரும் சந்தை பருவத்தில், சர்க்கரை உற்பத்தி, 3.50 கோடி டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|