பதிவு செய்த நாள்
28 செப்2018
00:52
புதுடில்லி : இந்தியா, சீனாவுக்கு முதன் முறையாக, பாசுமதி வகையைச் சாராத அரிசியை, இன்று ஏற்றுமதி செய்ய உள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் இருந்து, முதல் தவணையாக, 100 டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனா, இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசியை மட்டும் இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில், மேலும் அதிக வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும் என, இந்தியா கோரிக்கை விடுத்தது. இதை ஏற்று, பாசுமதி வகையை சாராத அரிசி இறக்குமதிக்கு, சீனா அனுமதி அளித்து உள்ளது.
இதையடுத்து, சில மாதங்களுக்கு முன், தாவர வகைபாடு, பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பான நடைமுறைகளுக்கு, இரு நாடுகளும் ஒப்புதல் அளித்தன.அதன்படி, பதிவு செய்யப்பட்ட, தரச் சான்று பெற்ற, 19 அரிசி ஆலைகளில் தயாராகும், அரிசி மட்டுமே, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும். மண், கல், நெல், உமி உள்ளிட்ட பொருட்களின்றி, சுத்தமான அரிசி மட்டுமே அனுப்ப வேண்டும். அரிசி கிடங்குகள் சுகாதாரமான முறையில், பூச்சிகள், புழுக்களின்றி, பாதுகாப்பு விதிமுறைகளின்படி, பராமரிக்க வேண்டும்.
ஏற்றுமதி செய்யப்படும் அரிசியில், வண்டு உள்ளிட்ட பூச்சிகளோ அல்லது பூச்சி தாக்குதலோ இருக்கக் கூடாது என்பதை, ஏற்றுமதியாளர்கள் உறுதி செய்வதும் அவசியம். இந்த விதிமுறைகளை பின்பற்றி, இந்தியா, முதன் முறையாக, இன்று சீனாவுக்கு, 100 டன் அரிசியை ஏற்றுமதி செய்ய உள்ளது.
வர்த்தக பற்றாக்குறை :
இந்தியா, சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை விட, பல மடங்கு அதிகமாக, சீனா, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதனால், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. கடந்த, 2016 -– 17ம் நிதியாண்டில், 5,108 கோடி டாலராக இருந்த, வர்த்தகப் பற்றாக்குறை, 2017 -– 18ல், 6,312 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதை குறைக்க, சந்தை வாய்ப்பை விரிவுபடுத்துமாறு சீனாவிடம், இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|