பதிவு செய்த நாள்
06 அக்2018
01:34
மும்பை:‘‘எதிர்பார்த்ததை விட, ஐ.எல்., அண்டு எப்.எஸ்.,சில் அதிக சிக்கல் உள்ளது,’’ என, இக்குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, உதய் கோட்டக் தெரிவித்து உள்ளார்.
ஐ.எல்.எப்.எஸ்., குழுமம், அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள், நிதிச் சேவைகள், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.இக்குழுமம், 91 ஆயிரம்கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் உள்ளது. இதன் துணை நிறுவனமான, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., பைனான்சியல், 17 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில், பல முறை, இந்நிறுவனம் குறித்த காலத்தில் கடனை திரும்பத் தர தவறியது.இது போன்ற காரணங்களால், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழும நிறுவனங்களின் பங்குகள், பெரும் சரிவை சந்தித்தன. தலைமை பொறுப்பில் இருந்து பலர் வெளியேறினர்.
கைப்பற்றியது
இத்தகைய சூழலில், மத்திய அரசு, அக்., 1ல், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமத்தின் பொறுப்பை ஏற்று, கோட்டக் மகிந்திரா வங்கி தலைவர், உதய் கோட்டக் தலைமையில், ஆறு பேர் கொண்ட புதிய இயக்குனர் குழுவை அமைத்தது.மும்பையில், நேற்று முன்தினம், இக்குழுவின் ஆலோசனை கூட்டத்திற்கு பின், உதய் கோட்டக் பேசியதாவது:
ஐ.எல்., அண்டு எப்.எஸ்., வெளிநாடுகளில் உள்ள, 50 துணை நிறுவனங்கள் உட்பட, 150 துணை நிறுவனங்கள் உள்ளதாக தெரிவித்திருந்தது.ஆனால், தற்போது, அதை விட இரு மடங்கு, அதாவது, 348 துணை நிறுவனங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.அவற்றில் பெரும்பாலான நிறுவனங்களுக்கு சொத்துகள் இல்லை என, ‘ஆடிட்டர்’கள் தெரிவித்துள்ளனர். சில நிறுவனங்கள் குறித்த தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்காமல் மறைக்கப்பட்டுள்ளன. அதனால், அறிவிக்கப்பட்டதை விட, கடன் அதிகமாக இருக்கும் என்ற ஐயமும் எழுந்துள்ளது.
ஆகவே, இக்குழும விவகாரம், எதிர்பார்த்ததை விட, சிக்கல் நிறைந்ததாக உள்ளது. இக் குழுமத்தைச் சார்ந்துள்ள வர்த்தகம், பணியாளர்கள், கடன்தாரர்கள், பங்கு முதலீட்டாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காணப்படும். அடுத்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்திடம், இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|