பதிவு செய்த நாள்
06 அக்2018
01:42
மும்பை:பல நிதிச் சேவை நிறுவனங்கள், சந்தை வல்லுனர்கள் ஆகியோரின் கணிப்பிற்கு மாறாக, ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை உயர்த்தாமல், பழைய வட்டி விகிதமே தொடரும் என, அறிவித்து உள்ளது.
மும்பையில், ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் தலைமையிலான, நிதிக் கொள்கை குழுவின் மூன்று நாள் கூட்டம் நேற்று முடிவடைந்தது.அதில், கச்சா எண்ணெய் விலையேற்றம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால், ரிசர்வ் வங்கி, வங்கிக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டியை உயர்த்தும் என, பலர் ஆரூடம் கூறினர்.அதற்கு மாறாக, ‘ரெப்போ வட்டியில் மாற்றமில்லை’ என, ரிசர்வ் வங்கி அறிவித்தது.
ஆலோசனை கூட்டத்தில், வட்டி உயர்வுக்கு எதிராக, ஐந்து உறுப்பினர்களும், ஆதரவாக, ஒரு உறுப்பினரும் கருத்து தெரிவித்தனர்.இதையடுத்து, ‘ரெப்போ வட்டி விகிதம்,6.50 சதவீதமாகவே நீடிக்கும்’ என, ரிசர்வ் வங்கி அறிவித்தது.இந்தாண்டு, இரு முறை, தலா, 0.25 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கரன்சி மதிப்புக்கு புதிய அமைப்பு
ரிசர்வ் வங்கி, நிதிச் சந்தையில் நிலவும், வட்டி விகிதம் மற்றும் அன்னியச் செலாவணி பரிவர்த்தனைக்கான குறியீடுகளை வழங்க, ‘பைனான்சியல் பெஞ்ச்மார்க்ஸ் ஆப் இந்தியா’ என்ற அமைப்பை ஏற்படுத்த உள்ளது.இந்த அமைப்பு, இந்திய வட்டி விகிதம் மற்றும் அன்னியச் செலாவணி மதிப்பிற்கான குறியீடுகளை அறிமுகப் படுத்தும்.இதற்காக, சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி, கொள்கைகளை உருவாக்கு வதுடன், குறியீடுகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் ஏற்கும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
இதனால், குறிப்பாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, கடன் பத்திர வட்டி வருவாய் ஆகியவை, அதிக ஏற்ற, இறக்கமின்றி கட்டுக்குள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய் வீழ்ச்சி தொடர்கிறது
நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் இடையே, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முதன் முறையாக, 74ஐ தாண்டி, 74.10 வரை சென்றது. வர்த்தகத்தின் இறுதியில், 73.76ல் நிலை பெற்றது.
ரிசர்வ் வங்கி அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
* ரெப்போ வட்டி விகிதம், 6.50 சதவீதமாக மாற்றமின்றி நீடிக்கும்
* ரிசர்வ் வங்கி, வங்கியிடம் பெறும் கடனுக்கான, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி, 6.25 சதவீதம் என்பதில் மாற்றமில்லை
* வங்கி ரொக்க இருப்பு விகிதம், 4 சதவீதமாக நீடிக்கும்
* நடப்பு, அக்., – 2019, மார்ச் வரை, சில்லரை பணவீக்கம், 3.8 –- 4 சதவீதத்திற்குள் இருக்கும்
* நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.4 சதவீதமாக இருக்கும்
* சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமும், நிலையற்ற தன்மையும் காணப்படுகிறது
* பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி குறைப்பால், சில்லரை விலை பணவீக்கம் மிதமாக இருக்கும்
* வெளிநாடு மற்றும் உள்நாட்டு நிதிப் புழக்க குறைவால், முதலீட்டு நடவடிக்கைகள் தேக்கம் காணலாம்
* ஏற்றுமதியில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது
* சர்வதேச வர்த்தக பதற்றம், கச்சா எண்ணெய் விலையேற்றம், உலக நிதி நிலவரங்கள் ஆகியவை, நாட்டின் வளர்ச்சிக்கு இடர்ப்பாடுகளாக உள்ளன
* பரவலான பொருளாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்
* அடுத்த நிதிக் கொள்கை குழு கூட்டம், டிச., 3ல் நடைபெறும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|