பதிவு செய்த நாள்
08 அக்2018
00:02
சிறிய அளவிலான, டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவைக்கு, ‘டிஜிட்டல் வாலெட்’களை விட யு.பி.ஐ., செயலி அதிக அளவில் பயன்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.
‘யூனிபைடு பேமென்ட்ஸ் இன்டர்பேஸ்’ எனப்படும், யு.பி.ஐ., செயலி ஸ்மார்ட்போன் மூலம் பயனாளிகள் வங்கி கணக்கில் இருந்து, நேராக வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை செய்ய உதவுகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவைக்கு, யு.பி.ஐ., பயன்பாடு அதிகரித்து வருகிறது.டிஜிட்டல் வாலெட்கள் மூலம் நிகழ்ந்து வந்த பரிவர்த்தனைகளில் கணிசமான அளவு பரிவர்த்தனை இப்போது, யு.பி.ஐ., செயலிக்கு மாறியிருப்பதாக, ‘பேமென்ட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா’ அமைப்பு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் வாலெட்களுக்கான தீவிரமான, கே.ஒய்.சி., நடைமுறை மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் சேவைக்கான, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு ஆகியவையும் இந்த மாற்றத்திற்கு காரணம் என, தெரிய வந்துள்ளது.செப்டம்பர் மாதம், யு.பி.ஐ., மூலமான பரிவர்த்தனை, 405 மில்லியனாக இருந்தது. ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது, இது, 70 சதவீதம் அதிகமாகும்.
ஆண்டு துவக்கத்தில் இது, 151 மில்லியனாக இருந்தது.ஜனவரி மாதம், 326 மில்லியனாக இருந்த டிஜிட்டல் வாலெட் மூலமான பரிவர்த்தனை ஜூலை மாதம், 320 மில்லியனாக குறைந்துஉள்ளதாக தெரிய வந்துள்ளது. டிஜிட்டல் வாலெட்கள் மற்றும் யு.பி.ஐ., மூலம் நிகழும் பெரும்பாலான பரிவர்த்தனைகள் சிறிய அளவிலானவையாக இருக்கின்றன. இதே போல, டெபிட் கார்ட் மூலம் பணம் செலுத்துவதும் அதிகரித்து இருப்பதாக, ரிசர்வ் வங்கி புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
இந்த மாற்றம் காரணமாக டிஜிட்டல் வாலெட் நிறுவனங்கள் பரவலான நிதிச்சேவைகளை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பிஉள்ளன. அது மட்டும் அல்லாமல், டிஜிட்டல் வாலெட் நிறுவனங்களும், யு.பி.ஐ., செயலி சேவையை முன்னிறுத்தி வருகின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|