பதிவு செய்த நாள்
08 அக்2018
00:09
கிரெடிட் கார்டு பயன்பாடு, உடனடி வசதி ஆகியவை, நவீன வாழ்க்கையின் முக்கிய அங்கமாக உள்ளது. இவை, அவசரத் தேவைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள உதவுகின்றன. ஆனால், இந்த கடன் வசதிகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், கடன் வலையில் சிக்கும் நிலை வரலாம். அளவுக்கு அதிகமாக கடன் வாங்குவதால், கண்ணுக்குத் தெரியாமல் விரியும் கடன் வலையை அறியும் வழிகள்:-
வருமானம் என்னாகிறது?
கடன் வாங்கும் வழக்கம் இருந்தால், கடனை அடைக்க, மாதந்தோறும், அதற்குரிய தொகையை ஒதுக்க வேண்டும். ஆனால், மாத வருமானத்தில், 30 சதவீதத்திற்கு மேலான தொகையை கடன் தவணைக்காக செலவிடக்கூடாது. கல்விக்கடன், வீட்டுக்கடன் போன்றவை இருந்தால், இது, 40 சதவீதமாக இருக்கலாம். அதற்கு அதிகமானால் சிக்கல் தான்.
கடன் வாங்கி செலவு
சம்பளம் உள்ளிட்டவை வாயிலாக மாத வருமானம் கணிசமாக வந்தும், மாத செலவுகளுக்கு கடன் வாங்கும் நிலை இருந்தால், நிச்சயம் சிக்கல் தான். கடனில் தான் வாழ்க்கை ஓடுகிறது எனும் நிலையில், ஒன்று செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது புதிய வருவாய் ஆதாரத்தை கண்டறிய வேண்டும். இல்லையெனில், கடன் வலை தீவிரமாகும்.
கிரெடிட் கார்டு கடன்
கிரெடிட் கார்டு பயன்படுத்த எளிதானது. ஆனால், கிரெடிட் கார்டு அறிக்கை பல விஷயங்களை உணர்த்தக்கூடியது. கிரெடிட் கார்டு பயன்பாட்டிற்கான மாதாந்திர தொகையை செலுத்த முடியாமல், அவதிப்படும் நிலை இருந்தால், கடன் சுமை அதிகமாக இருப்பதாக பொருள். அதை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
கடனை அடைக்க கடன்
ஒரு கார்டில் நிலுவையில் உள்ள தொகையை, இன்னொரு கார்டுக்கு மாற்றுவது கடன் சுமையின் அடையாளமாகும். ஏற்கனவே உள்ள கடனை அடைக்க, புதிதாக கடன் வாங்குவது அளவுக்கு அதிகமாக கடன் பெற்றிருக்கும் சூழலில் நிகழக்கூடியது. இது, நிச்சயம் கடன் வலைக்கே அழைத்துச் செல்லும்.
கடன் மறுப்பு
கடனுக்காக விண்ணப்பிக்கும் போது, வங்கிகள் அதற்கு மறுத்தால், கடன் வலையின் அடையாளமாக அதை கருதலாம். வங்கிகள் பயனாளிகளின், ‘கிரெடிட் ஸ்கோர்’ அடிப்படையிலேயே கடன் வழங்குகின்றன. தகுதி வாய்ந்தவர்களுக்கு கூப்பிட்டு கடன் கொடுப்பதும் உண்டு. அதே நேரம், வங்கிகள் புதிய கடன் மறுத்தால் விழித்துக் கொள்ள வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|