பதிவு செய்த நாள்
09 அக்2018
23:31
புதுடில்லி:மருத்துவ காப்பீடுகளை, மருந்தகங்கள் மற்றும் பரிசோதனை நிலையங்கள் விற்பனை செய்வதை அனுமதிப்பது குறித்த ஆலோசனையில் இறங்கி உள்ளது, ஐ.ஆர்.டி.ஏ., எனும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம்.
இது குறித்து ஆணையத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுவாக, ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் குறித்த விஷயங்களில் மக்களுடன் சிறப்பான தொடர்பில் இருப்பவை, மருந்தகங்களும் பரிசோதனை நிலையங்களும்தான். இவற்றை எளிதாக காப்பீட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனால் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த இயலும்.
மருந்தகங்கள் மற்றும் பரிசோதனை நிலையங்கள் மூலமாக, மருத்துவ காப்பீடுகளை விற்பனை செய்வதை அனுமதிப்பது குறித்த ஆலோசனைகள், விரைவில் கோரப்பட உள்ளன.ஒரு சில காப்பீட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே இத்தகைய விற்பனைக்கு அனுமதி தரப்படும். காரணம், காப்பீடுகள் முறையாக விற்பனை செய்யப்பட வேண்டும்; அதில் எந்த தவறுகளும் நேர்ந்துவிடக்கூடாது என்பது தான்.
இதற்காக காப்பீட்டு நிறுவனங்கள், மருந்தகங்கள் மற்றும் பரிசோதனை நிலையங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும். பின், அவற்றில் உள்ள நபர்களுக்கு மருத்துவ காப்பீடு குறித்து பயிற்சி வழங்கும்.இந்த முயற்சியானது மூன்றாம் மற்றும் நான்காம் நிலை நகரங்களில் உள்ளவர்களுக்கு மிகுந்த பலனளிக்கும்.இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.
இது குறித்து, ‘தைரோகேர்’ டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ஏ.வேலுமணி கூறியதாவது:நாடு முழுவதும் ஒரு லட்சம் பரிசோதனை நிலையங்கள் உள்ளன. மக்களுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்படும் போது, அவர்கள் நாங்கள் சொல்வதை கவனமாக கேட்டுக் கொள்வர். எனவே, மருத்துவ காப்பீட்டின் நன்மை குறித்து அவர்கள் அறிந்துகொள்ள, இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|