பதிவு செய்த நாள்
16 அக்2018
23:48
புதுடில்லி : மின்னணு பணப் பரிவர்த்தனை தகவல்களை உள்நாட்டில் சேமித்து வைக்காத அன்னிய நிறுவனங்களுக்கு, ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கும் என, தெரிகிறது.
இந்தியாவில் செயல்படும் அன்னிய நிறுவனங்கள், மின்னணு பணப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை, வெளிநாடுகளில் சேமித்து வைக்கின்றன.அதனால், புலனாய்வு அமைப்புகளுக்கு, சட்ட விரோத பணப் பரிமாற்றம், கறுப்பு பண புழக்கம் போன்றவற்றை கண்காணிப்பது சிரமமாக உள்ளது. உள்நாட்டில் தகவல்களை சேமிப்பதால், தகவல் திருட்டு, கணினி சார்ந்த நிதி மோசடிகள் குறித்த புலனாய்வை சுலபமாக மேற்கொள்ளலாம்.
இதையொட்டி, மின்னணு பணப் பரிவர்த்தனை சேவையை வழங்கும் அன்னிய நிறுவனங்கள், இந்தியாவில், ‘சர்வர்’ அமைத்து பணப் பரிவர்த்தனை தகவல்களை சேமிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி, ஏப்ரலில் உத்தரவிட்டது. இதற்கான கெடு, நேற்று முன்தினம் முடிவடைந்தது.
இது குறித்து, வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில், மின்னணு பணப் பரிவர்த்தனை சேவையில், 78 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றில், மாஸ்டர் கார்டு, விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், பே பால் உள்ளிட்ட, 15 நிறுவனங்கள் மட்டும், இன்னும், ‘சர்வர்’ அமைத்து, தகவல்களை இங்கு சேமிக்காமல் உள்ளன. எனினும், இத்திட்டத்திற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, அவை ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்து உள்ளன.
இந்நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனை சேவையை முடக்கினால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர். ஆகவே, ரிசர்வ் வங்கி அன்னிய நிறுவனங்களின் சேவையை முடக்காமல், அபராதம் மட்டும் விதிக்கும் என, தெரிகிறது. இம்மாத இறுதிக்குள் அன்னிய நிறுவனங்கள், இங்கு, ‘சர்வர்’ அமைத்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|