பதிவு செய்த நாள்
18 அக்2018
04:11
புதுடில்லி : பாரத் ஓட்டல்ஸ் மற்றும் ஸ்பந்தனா ஸ்பூர்த்தி ஆகிய இரு நிறுவனங்களுக்கும், புதிய பங்குகளை வெளியிட, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி அனுமதி வழங்கி உள்ளது.
இந்த இரு நிறுவனங்களும், ஜூன் மாதத்தில், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தன. பரிசீலனைக்கு பின், தற்போது செபி அனுமதி வழங்கி உள்ளது.
பாரத் ஓட்டல்ஸ் :
லாலிட் எனும் பிராண்டு பெயரில் ஓட்டல்களை நடத்தி வரும் இந்நிறுவனம், 1,200 கோடி ரூபாய் நிதி திரட்டும் பொருட்டு பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. திரட்டப்படும் நிதியை, குறிப்பிட்ட கடன்களை அடைக்கவும், பொதுவான நிர்வாக தேவைகளுக்காகவும் பயன்படுத்த, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மார்ச் மாத நிலவரப்படி, பாரத் ஓட்டல்ஸ், 12 ஆடம்பர ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளை நடத்துகிறது. இந்நிறுவனத்தின் வசம், 2,261 அறைகள் உள்ளன. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, எச்.டி.எப்.சி., பேங்க், எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ் மற்றும் யெஸ் செக்யூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
ஸ்பந்தனா ஸ்பூர்த்தி :
குறுங்கடன் வழங்கும் இந்நிறுவனம், 400 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வெளியிட உள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் பங்குதாரர்களின் 1,31,46,595 பங்குகளையும் வெளியிட உள்ளது. மூலதன தேவைகளுக்காகவும், நிர்வாக தேவைகளுக்காகவும் பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஆக்சிஸ் கேப்பிட்டல், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ் மற்றும் ஜெ.எம்.பைனான்ஷியல் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. இந்த ஆண்டில், இந்த இரு நிறுவனங்களையும் சேர்த்து, மொத்தம், 60 நிறுவனங்கள், பங்கு வெளியீட்டுக்காக செபியின் அனுமதியை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|