பதிவு செய்த நாள்
24 அக்2018
23:16
புதுடில்லி : மொபைல் போனில் போலி, ‘ஆப்’கள் மூலம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட, ஏழு வங்கிகளைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம்... என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, ‘சோபோஸ் லேப்ஸ்’ நிறுவனம், தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், எஸ்.பி.ஐ., – ஐ.சி.ஐ.சி.ஐ., யெஸ் பேங்க், பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், சிட்டி பேங்க் ஆகிய, ஏழு வங்கிகளின் வாடிக்கையாளர் கணக்குகள், ‘கிரெடிட் கார்டு’ தகவல்கள் ஆகியவை, மொபைல் போனில் புழங்கும் போலி ஆப்கள் மூலம் திருடப்பட்டிருக்கலாம் என, தெரிவித்துள்ளது.
மொபைல் போன்களில் புழங்கும் போலி, ‘ஆன்டிராய்டு’ ஆப்களில், ஒரிஜினல் வங்கியின் சின்னம் போல, அச்சு அசலான சின்னங்கள் உள்ளன. கூகுள் ஸ்டோரில் இந்த ஆப்கள், அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன.
மோசடி சாப்ட்வேர் :
அதனால், வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கியின் அசல் ஆப் என நினைத்து, போலி ஆப்களை பதிவிறக்கி, வங்கிச் சேவைகளை கையாள்கின்றனர்.இந்த ஆப்களில், ‘மால்வேர்’ எனப்படும், கணினி ஒருங்கிணைப்பை பதம் பார்க்கும், மோசடி சாப்ட்வேர்கள் இணைந்து உள்ளன.அவை, வங்கிகளின் ஒருங்கிணைந்த தகவல் பரிவர்த்தனைக்கான, ‘சர்வர்’ சாதனத்திற்குள் புகுந்து, வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடுகின்றன.
திருடப்படும் தகவல்களை வைத்து, கணினி நாசக்காரர்கள், வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் பண மோசடி செய்கின்றனர். மேலும், திருடப்பட்ட தகவல்கள் மூலம், போலியான கிரெடிட் கார்டுகளை தயாரித்து, ஏ.டி.எம்.,களில் பண மோசடிகளும் நடைபெறுகின்றன.
‘நாங்கள் ஆய்வு செய்ததில், எஸ்.பி.ஐ., – ஐ.சி.ஐ.சி.ஐ., யெஸ் பேங்க், பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், சிட்டி பேங்க் ஆகிய, ஏழு வங்கிகளின் போலி ஆப்களை அதிகம் காண நேர்ந்தது. அதனால், இவ்வங்கிகளின் வாடிக்கையாளர் தகவல்கள் திருடப்பட்டு இருக்கலாம்’ என, சோபோஸ் லேப்ஸ் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மறுப்பு :
இதற்கு, சிட்டி வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. வங்கியின் தகவல் பாதுகாப்பு கட்டமைப்பு வலுவாக உள்ளதால், போலி ஆப்களால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, தெரிவித்து உள்ளது.மேலும், சோபோஸ் லேப்ஸ் அறிக்கையில் இருந்து, தன் பெயரை நீக்குமாறும், கோரி உள்ளது.
அதேசமயம், இப்பிரச்னை குறித்து, சைபர் மோசடி பிரிவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக, யெஸ் பேங்க் தெரிவித்து உள்ளது.ஒரு சில வங்கிகள், தகவல் மோசடி குறித்து விசாரிக்குமாறு, தேசிய கணினி பாதுகாப்பு மையமான – சி.இ.ஆர்.டி.,யை அணுகியுள்ளன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
தடுக்க என்ன வழி?
பல வங்கிகள், அவற்றின் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்கள் வாங்குவோருக்கு, இலவச மொபைல் டேட்டா, வட்டி இல்லாத கடன், பரிசுக் கூப்பன் போன்ற ஊக்கச் சலுகைகளை வழங்குகின்றன. இதே சலுகைகளை வழங்குவதாக, ஒரு சில போலி ஆப்களும் தெரிவிக்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக, வாடிக்கையாளர் விரும்பினால், அவர் கணக்கில், ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து, வீட்டிற்கே வந்து தருவதாகவும் போலியான வாக்குறுதிகளை அளிக்கின்றன. இது போன்ற மோசடி மால்வேர்கள், இந்திய துணைக் கண்டத்தின் வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கு அல்லது கிரெடிட் கார்டு விபரங்களை திருடியிருக்கலாம்.
ஆண்ட்ராய்ட் இயக்கத் தொகுப்பில், போலி ஆப்கள் இருப்பது புதிதல்ல. அதுபோல, மால்வேர்களும் ஆண்ட்ராய்ட் ஆப் ஸ்டோரில் தொடர்ந்து இருக்கத்தான் செய்யும். மொபைல் போன் பயன்படுத்துவோர், ‘ஆன்டி வைரஸ்’ சாப்ட்வேர்களை பயன்படுத்தி, மோசடி மால்வேர்களை முடக்கலாம். அத்துடன், போலி ஆப்கள் மூலம் தங்கள் தகவல்கள் திருடப்படுவதையும் தடுக்கலாம்.
-பங்கஜ் கோஹ்லிஆய்வாளர், சோபோஸ் லேப்ஸ்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|