பதிவு செய்த நாள்
26 அக்2018
04:25
புதுடில்லி : ‘‘இந்தியா, டிஜிட்டல்மயமாவதற்கு ஆதரவாக இருக்கிறது. தகவல் பாதுகாப்பு சட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதேசமயம், தகவல்களை பேணிக்காப்பதில் உள்ள தீவிரத்தையும் விட்டுக்கொடுக்காது’’ என, தகவல் தொழில்நுட்ப மற்றும் சட்டத் துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
நேற்று டில்லியில், ‘இந்திய மொபைல் காங்கிரஸ் – 2018’ துவக்க விழா நிகழ்ச்சியில், ரவிசங்கர் பிரசாத் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:இந்தியாவில் அலைபேசி உற்பத்தி பன்மடங்கு பெருகியுள்ளது. இந்தியர்கள் உள்ளடக்கங்களை, தங்கள் சொந்த மொழியிலேயே பெற விரும்புகின்றனர். அதற்கு ஏற்ப, பிராந்திய மொழிகளில் உள்ளடக்கம் கிடைப்பதற்கான புதிய தொழில்நுட்ப தீர்வுகளை, நாம் கண்டுபிடிக்கவேண்டும்.
சாதாரண மக்களையும் சென்றடைவதற்குத் தேவையான தொழில்நுட்பங்கள், இந்தியாவுக்குத் தேவைப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.இந்த மாநாட்டில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:நாம் அலைபேசி பிராட்பேண்டு சேவையில், இரண்டே ஆண்டுகளில், 155வது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு வந்துள்ளோம்.
‘ஜியோ’வின் கம்பிவட வழியான பிராட்பேண்டு சேவைகள், இந்தியாவை உலகின் முதல் மூன்று இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும். தற்போது பிராட்பேண்டு இணைய சேவையில், இந்தியா, 135 இடத்தில் இருக்கிறது;இந்நிலை விரைவில் மாறும்.‘2ஜி’ மற்றும் ‘3ஜி’ சேவைகளில் இருந்து, ‘4ஜி’ சேவைக்கு நம் நாடு முன்னேறிய வேகம், வேறு எந்த நாட்டிலும் நடைபெறாதது. 2020க்குள், ‘5ஜி’ சேவைகளைப் பெறுவதில் மற்ற நாடுகளைவிட நாம் முன்னணியில் இருப்போம் என்பது நிச்சயம்.
அனைத்து இடங்களிலும் இணையம் மற்றும் அதற்கான கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், இந்தியாவில் நான்காவது தொழில் புரட்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதன்மூலம், இந்தியாவின், 1.5 கோடி விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும், ஆயுஷ்மான் பாரத் திட்டம் நிர்ணயித்திருக்கும் இலக்கான, 5 கோடி பேருக்கு மருத்துவ சேவைகள் கிடைக்கும் 2 கோடி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தரமான கல்வி வசதி கிடைக்கும்.
அதேசமயம், நாம் ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிய உலகில் தகவல்கள் தான் மிகமுக்கியமான ஆதாரங்கள். இந்த வளமிக்க தகவல்களை, போதிய பாதுகாப்புகளுடன், பயனுள்ள வகையில் நாம் பயன்படுத்தவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
புகையிலை அளவுக்கு வரி :
இந்திய மொபைல் காங்கிரஸ் – 2018 துவக்க விழாவில் பேசிய பார்தி ஏர்டெல் தலைவரான சுனில் மிட்டல், “புகையிலைத் தொழில் மாதிரி, தொலைத் தொடர்புத் துறையிலும் வரிவிதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. இதை அரசு தீர்க்க வேண்டும்’’‘‘அலைக்கற்றை எடுத்துச் செல்லும் கம்பிவடங்களை, தேசிய சொத்தாக அறிவிக்க, மத்திய அரசு முனைப்பு காட்டவேண்டும். அலைக்கற்றைக்கான கட்டணங்கள் இன்னும் குறைக்கப்பட வேண்டும்’’ என, கேட்டுக்கொண்டார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|