பதிவு செய்த நாள்
02 நவ2018
23:48
வாஷிங்டன்:‘‘உலகில் எந்த ஒரு நாடும், ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிடுவதை ஏற்க முடியாது,’’ என, பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
ரூபாய் வெளிமதிப்பின் தொடர் சரிவு, பங்குச் சந்தை வீழ்ச்சி, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., பிரச்னையால், நிதிச் சந்தையில் குறைந்துள்ள பணப்புழக்கம் போன்ற சமீபத்திய பிரச்னைகளில், ரிசர்வ் வங்கி தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தியில் மத்திய அரசு உள்ளது.இதற்கு, வர உள்ள பொதுத் தேர்தல் குறித்த அச்சமும் ஒரு காரணம் எனலாம்.
எனவே, முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க வருமாறு, மத்திய அரசு, முதன் முறையாக, ரிசர்வ் வங்கி சட்டம், பிரிவு – 7ஐ பயன்படுத்தி, மூன்று கடிதங்களை, ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியது.இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், விரால் ஆச்சார்யா, ‘‘ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிடுவது, நிதிச் சந்தையின் அழிவுக்கு வழி வகுக்கும்,’’ என, பகிரங்கமாக எச்சரித்தார்.
வாராக்கடன்
இதை தொடர்ந்து, ‘‘2008 -– 14 வரை, வங்கிகள் தாராளமாக வழங்கிய கடன்களை கண்காணிக்க, ரிசர்வ் வங்கி தவறியதால் தான், தற்போது வாராக் கடன் இந்த அளவிற்கு உயர்ந்தது,’’ என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதிலடி கொடுத்தார்.இந்த மோதலை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல், பதவி விலக உள்ளதாக செய்தி வெளியானது. உடனே, ‘ரிசர்வ் வங்கி தனி அதிகாரத்துடன், எவ்வித தலையீடுமின்றி சுதந்திரமாக செயல்படுகிறது’ என, மத்திய அரசு தெரிவித்தது.
கண்காணிப்பு
இந்நிலையில், பன்னாட்டு நிதியத்தின் தகவல் தொடர்பு துறை இயக்குனர், கெரி ரைஸ் கூறியதாவது:உலகில், எந்த நாடும், மத்திய வங்கியின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது. அதை, பன்னாட்டு நிதியம் எதிர்க்கும். பல நாடுகள், தற்போது மத்திய வங்கிகளின் சுதந்திரத்தில் தலையிடத் துவங்கியுள்ளதால், இதை தெரிவிக்கிறேன்.மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான பிரச்னையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படும் என அறிவித்த போது, அதை, அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|