பதிவு செய்த நாள்
03 நவ2018
23:30
புதுடில்லி:‘வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, 30,000 – 40,000 கோடி ரூபாய் வரை, கடனுதவி வரம்பை உயர்த்தி, நிதிச் சந்தையின் பணத் தட்டுப்பாட்டு பிரச்னைக்கு, ரிசர்வ் வங்கி தற்காலிக தீர்வு காண வேண்டும்’ என, இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான – அசோசெம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, இக்கூட்டமைப்பின் செகரட்டரி ஜெனரல், உதய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனம், கடன் தவணை செலுத்த தவறியது முதல், ரூபாய் வெளிமதிப்பு சரிவை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் வரை, பல்வேறு காரணங்களால், நிதிச் சந்தையில், பணப்புழக்க பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால், நிதிச் சந்தைகளில், மூலதன கடனுக்கான செலவு உயர்ந்து உள்ளது.
இதை குறைக்க, ரிசர்வ் வங்கி, உடனடியாக பணப்புழக்கத்தை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.வட்டிரிசர்வ் வங்கி, நிதிக் கொள்கைகளை தளர்த்தி, வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை குறைத்தால், கடன் செலவு குறையும். முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை பெருகும்.மத்திய அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக, தொடர்ந்து பல்வேறு முற்போக்கு கொள்கைகளை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.
இதன் விளைவாக, சுலபமாக தொழில் துவங்கும் நாடுகளில், இந்தியா, இந்தாண்டு, 100வது இடத்தில் இருந்து, 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.இந்நிலையில், பண நெருக்கடியால், சில துறைகள், குறிப்பாக, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கிகளுக்கும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் இடையே, பாலமாக, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளன.
எனவே, இந்நிறுவனங்கள், நிதி நெருக்கடியில் சிக்கினால், அது, அடுக்கடுக்கான பாதிப்புகளுக்கு வித்திடும்.பொதுநலன் கருதியும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், ரிசர்வ் வங்கி, உடனடியாக நிதிச் சந்தையின் பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.இதற்கு, ரிசர்வ் வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் முதல், 40 ஆயிரம்கோடி ரூபாய் வரை, கடனுதவி வரம்பை உயர்த்த வேண்டும்.
இதன் மூலம், பணப் புழக்க பிரச்னைக்கு, தற்காலிக தீர்வு காணலாம்.இது, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதுடன், தயாரிப்பு, நுகர்பொருள், சிமென்ட், உருக்கு, அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட இதர துறைகளின் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகள் உருவாகவும் உதவும்.கடுமையான ஒழுங்குமுறையை பின்பற்றுவதில் கறாராக இருப்பதை விட, சூழலுக்கு ஏற்றார்போல, கொள்கைகளை தளர்த்தி, பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு அனுமதி
முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி கடன் நிறுவனங்கள் ஆகியவை வெளியிடும் கடன் பத்திர மதிப்பில், குறிப்பிட்ட அளவிற்கு உத்தரவாதம் அளிக்க, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வெள்ளியன்று அனுமதி வழங்கியது. இதனால், இந்நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கு, முதலீட்டாளர்களிடம் வரவேற்பு கிடைக்கும். நிறுவனங்களின் நிதி நெருக்கடி ஓரளவு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|