பதிவு செய்த நாள்
05 நவ2018
00:38
சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை, கடந்த ஆறு மாதங்களாக, ஒரு பேரல், 65 முதல், 75 அமெரிக்க டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வந்தது. தற்போது, ஒரு பேரல், 62.5 அமெரிக்க டாலர் என, வர்த்தகமாகி வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஒரு பேரலுக்கு சுமார், 12 அமெரிக்க டாலர் அளவுக்கு விலை சரிந்தது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் மிகப் பெரிய சரிவு இதுவே ஆகும்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக, உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் விலை பெரிய அளவில் குறையவில்லை.ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா கொண்டுவந்துள்ள பொருளாதார தடை மற்றும் எண்ணெய் ஏற்றுமதி தடை குறித்து, வெள்ளி அன்று, அமெரிக்கா புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் சில முக்கிய நாடுகளுக்கு தடையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் என்றும், அவை தொடர்ந்து இறக்குமதி செய்யலாம் என்றும் அறிவித்தது.
இதனால், இறக்குமதி நாடுகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் எண்ணெய் கிடைக்கும் என்ற கோணத்தில், சந்தையில், வெள்ளியன்று விலை, 6 சதவீதம் சரிந்தது.அமெரிக்காவின் ஷெல் கச்சா எண்ணெய் உற்பத்தி, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இயங்கி வரும் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்து, தற்போது, 175 எண்ணெய் குழாய்கள் இயங்கி வருகின்றன.
தினசரி எண்ணெய் உற்பத்தி, 1 லட்சம் பேரல்கள் அதிகரித்து, மொத்த உற்பத்தி, தினசரி, 10.9 மில்லியன் பேரல்களாக உற்பத்தி பெருகி வருகிறது. அதிகரித்துவரும் உற்பத்தி, மற்றும் தேவை குறைவால் ஏற்பட்டுள்ள இருப்பு அதிகரிப்பு போன்றவற்றால் விலை ஏற்றம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, வர்த்தகமாகி வருகிறது.
கடந்த சில மாதங்களாக நிலவி வந்த அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி பாதிப்பால், தற்போது இரு நாடுகளும் சுமுகமான நிலைக்கு ஆலோசித்து வருகின்றன.நிலைமை கட்டுக்குள் வரும் பட்சத்தில், எண்ணெய் விலையில் அதிகப்படியான மாற்றங்கள் தவிர்க்கப்படும்.
தங்கம் வெள்ளி
தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை, தொடர்ந்து ஐந்து வார உயர்வுக்குப் பின், கடந்த வாரம் சரிவில் வர்த்தகம் ஆனது.அமெரிக்க நாணய குறியீடான டாலர் மதிப்பு உயரவும், அதற்கு எதிராக தங்கம் மற்றும் வெள்ளி உட்பட கமாடிட்டி பொருட்களின் விலை சரிவை கண்டது.
அமெரிக்காவின் அரசாங்க வேலைகளில் எதிர்பார்ப்புக்கு மேலாக, கடந்த வாரம், அதிகமானோர் வேலையில் அமர்த்தப்பட்டனர். இதனால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்ற எண்ணம் எழுந்தது. அடுத்து 2019ம் ஆண்டில் மூன்று முறையும், 2020ம் ஆண்டில் ஒரு முறையும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என கடந்த மாதம் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர்
அறிவித்திருந்தார்.
பொருளாதார வளர்ச்சி ஏற்படும் தற்போதைய சூழலில், வட்டி விகித உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்ற கோணத்திலும், வட்டி விகிதம் உயரும்போது, தங்கம் மீதான முதலீடு குறையும் என்ற எதிர்பார்ப்பிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவு அடைந்தது.
வரும் செவ்வாய் அன்று, அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஏற்படும் அரசியல் மாற்றங்களும் கமாடிட்டி மற்றும் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கடந்த வெள்ளியன்று உயர்ந்து வந்த தங்க விலை, திடீரென சரிந்தது. இதற்கு காரணம் பிரிட்டிஷ் பிரதமர் பேச்சு ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு எந்த ஒரு புதிய ஒப்பந்தமும் இதுவரை செய்யப்படவில்லை என, பிரதமர் தெரிவித்திருந்தார்.
இது, அந்நாட்டு நாணய மதிப்பு சரிவு மற்றும் அமெரிக்க டாலர் விலை உயர்வுக்கு காரணமாகியது. இதனால் கடந்த வெள்ளியன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலையில், 1 சதவீதத்துக்கும் அதிகமாக சரிவு நிகழ்ந்தது.
ஜி.எப்.எம்.எஸ்., நிறுவனம் நடத்திய, உலக தங்க உற்பத்தி கருத்துக்கணிப்பு நிலவரத்தில், சீனா தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. சீனாவின் மொத்த உற்பத்தி, 426 மெட்ரிக் டன். இரண்டாவதாக, ஆஸ்திரேலியா, 275 மெட்ரிக் டன். மூன்றாவதாக ரஷ்யா, 270 மெட்ரிக் டன் ஆகும். உலக நாடுகளின் மொத்த உற்பத்தியானது, 2017ல், 3,247 மெட்ரிக் டன் ஆகும்.
செம்பு
செம்பு விலை, கடந்த வாரம் அதிகரித்து, வர்த்தகம் ஆனது. கடந்த வாரம் நடைபெற்ற அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல் மற்றும் இறக்குமதி வரி விதிப்பு குறித்த பேச்சு சுமுக நிலையை எட்டாத நிலையில், செம்பு விலை உயர்ந்தது.
லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச் பொருள் வாணிப சந்தையில், செம்பு இருப்பு விபரம் கடுமையாக குறைந்ததும், சந்தைக்கு சாதகமாக அமைந்தது. மேலும், கேன்சல் வாரண்ட் எனப்படும், இருப்பு விபரம், 47 சதவீதம் அதிகரித்து உயர்ந்தது. இது, 2015ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது உச்ச உயர்வாகும். 1 டன் செம்பு விலை, 6 ஆயிரம் அமெரிக்க டாலர் என்பதை கடந்து வர்த்தகம் நடைபெற்றது.
உலக அளவில், செம்பு நுகர்வில், சீனா முதலிடம் வகிக்கிறது. சீனாவின் தேவை மற்றும் இறக்குமதி விலையில் மாற்றங்களை ஏற்படுத்தும். கடந்த சில மாதங்களாக, இந்நாட்டின் நுகர்வு தேவை குறைந்ததன் காரணமாக விலை கடுமையாக சரிந்துள்ளது. வரும் நாட்களில் இத்தகைய போக்கு கட்டுக்குள் கொண்டு வரப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|