பதிவு செய்த நாள்
12 நவ2018
00:29
கடந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள், நம்முடைய முதலீட்டு பார்வைகளை மாற்றி அமைக்கும் வண்ணம் அமைந்தன.
அமெரிக்க தேர்தல் முடிவுகள், ஈரானில் இருந்து கச்சா இறக்குமதி செய்ய இந்தியாவிற்கு அனுமதி, கச்சா எண்ணெய் விலையில் கடும் வீழ்ச்சி மற்றும் வட்டி விகிதங்களின் மாற்றங்கள் ஆகியவை, நாம் ஏற்கனவே எடுத்த முதலீட்டு பார்வைகளை, மீண்டும் ஆய்வு நிலைக்கு தள்ளிவிட்டன. இதற்கு என்ன அவசியம்?உலக அரசியல் நிகழ்வுகள் வேகமாக மாறும் சூழலில், அந்த மாற்றங்களின் பொருளாதார தாக்கத்தை நாம் தவிர்க்க முடியாது.
முதலீட்டாளர்கள் அந்த தாக்கங்களை உரிய நேரத்தில் ஆய்வு செய்து, வருங்காலத்திற்கு ஏற்ப தேவையான முதலீட்டு மாற்றங்களை விரைந்து எடுக்க வேண்டும்.கச்சா எண்ணெய் திடீர் விலை உயர்வும் வீழ்ச்சியும், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்தன. இரண்டுமே சிறிதும் எதிர்பார்க்கப்படவில்லை என்பதே உண்மை.அவற்றின் வேகம், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் முறியடித்தன.
குறிப்பாக, இந்தியாவிற்கு இந்த மாற்றங்கள் பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை.கச்சா விலை ஏறிய போது, ரூபாயின் மதிப்பு, இந்திய அரசின் நிதி பற்றாக்குறை, எப்.ஐ.ஐ., முதலீட்டாளர்களின் இந்திய எதிர்பார்ப்புகள் ஆகியவை வெகுவாக பாதிக்கப்பட்டன. கச்சாவின் கிடுகிடு விலை உயர்வு, சந்தையின் திடீர் சரிவுக்கு வழிவகுத்தது. வாகன விற்பனை, இறக்குமதி சார்ந்த தொழில்கள் போன்றவை பாதிக்கப்பட்டன.
பொருளாதார வளர்ச்சியும், நிறுவன வளர்ச்சியும் மீண்டும் திரும்பும் சூழல் தெளிவாக இருந்தும், நிறுவன லாபம், கச்சா எண்ணெய் விலை உயர்வால் பாதிக்கப்பட்டது.நிறுவன வருவாய் வளர்ச்சி கண்டும், அதன் பலன்கள் லாப வளர்ச்சியில் பிரதிபலிக்கவில்லை. இந்த நிலையில் தான் பங்குச் சந்தை சரிந்தது.
முதலீட்டாளர்கள், நிறுவனங்களின் வருங்கால வளர்ச்சி, கச்சா விலையால் பெரிதும் பாதிக்கப்படும் என்ற கணிப்பில் பங்குகளை விற்றனர். ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக, சந்தையின் குறியீடுகள் சரிவு கண்டவுடன், கச்சா எண்ணெய் விலையும் சரிந்தது.இது சந்தை எதிர்பார்க்காத ஒன்று. 86 டாலரை தொட்ட, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, இப்போது, 70 டாலருக்கு குறைவாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
இந்திய பொருளாதாரத்திற்கு இந்த வீழ்ச்சி மிக சாதகமான நிகழ்வு.ஈரானில் இருந்து தொடர்ந்து ஆறு மாதங்கள், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தந்த அனுமதி, ரூபாய் கொடுத்து இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க வழி செய்யும். சமீப மாதங்களில் இழந்த ரூபாய் மதிப்பில், ஒரு பகுதி மீட்கப்படுவது உறுதி.
வரும் மாதங்களில், கச்சா எண்ணெய் விலை கூடாதபட்சத்தில், டாலரின் மதிப்பு குறையவும், ரூபாயின் மதிப்பு கூடவும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையும் ஓரளவு கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையும் வளரும்.இதற்கு சந்தையும் முதலீட்டாளர் களும் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். நம்முடைய முதலீடுகளை மாற்றி அமைத்துக்கொள்ள நாம் நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளோம்.
இந்த நிர்ப்பந்தத்தை நாம் உணர்வதே இப்போதைய கட்டாயம்.அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொள்வது பொதுவாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றாலும்,சில தருணங்களில் தவிர்க்க முடியாததாகி விடும். அத்தகைய தருணத்தை நோக்கி சந்தை செல்வதாகவே தோன்றுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|