பதிவு செய்த நாள்
19 நவ2018
04:14
அச்சம் காரணமாக, குறைந்த, ‘ரிஸ்க்’ உடைய முதலீடுகளை மட்டுமே நாடுவது ஒரு ரிஸ்காக அமைந்து, இலக்கை அடைவதை பாதிக்கலாம்.
முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்யும் போது, அவற்றின் ரிஸ்க் தன்மையை பரிசீலிப்பதும் அவசியம். குறைவான ரிஸ்க் கொண்ட முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்வதும் நல்லது தான். ஆனால், அனைத்து முதலீடுகளுமே குறைந்த ரிஸ்க் கொண்டதாக இருக்கும் போது, பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம் என்றாலும், இலக்குகளை அடைவதற்கான தடையாகவும் அமைந்துவிடலாம். அதிலும் குறிப்பாக அச்சம் காரணமாக, அதிக ரிஸ்க் கொண்ட முதலீடுகளை எல்லாம் தவிர்க்கும் தன்மை கொண்டிருந்தால், முதலீட்டின் மீது முழு பலனை பெற முடியாமல் போகலாம்.
பாதுகாப்பு முக்கியமானது என்றாலும், பாதுகாப்பை மட்டுமே முக்கிய அம்சமாக கருதி முதலீட்டு முடிவை மேற்கொள்ளும் போது ஏற்படக்கூடிய தவறுகள் மற்றும் அவற்றை தவிர்க்கும் வழிகள் என, நிதி வல்லுனர்கள் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
மறைந்திருக்கும், ‘ரிஸ்க்’:
முதலீடுகளை தேர்வு செய்யும் போது அவை நிதி இலக்குகளுக்கு ஏற்ப அமைந்திருப்பது முக்கியம். அந்த வகையில் நீண்ட கால இலக்குகள் எனில், அதற்கேற்ற முதலீடுகளை நாட வேண்டும். பொதுவாக சமபங்கு முதலீடுகள் ரிஸ்க் அதிகமானவை என்றாலும், நீண்ட கால நோக்கில் ஏற்றவை என, கருதப்படுகின்றன. மாறாக, நீண்ட கால இலக்குகளுக்கு, குறுகிய கால பலன் தரக்கூடிய வைப்பு நிதி போன்ற முதலீடுகளை நாடும் போது, பணவீக்கத்தின் பாதிப்பு பலனை பாதிக்கும் ரிஸ்க் இருக்கிறது. இதனால், எதிர்பார்த்த பலனை பெற முடியாமல் போகலாம்.
எனவே, இழப்பு ஏற்படலாம் என்பது மட்டும் அல்ல ரிஸ்க். எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போவதும் ரிஸ்க் தான். சில நேரங்களில் ரிஸ்க் எடுக்காமல் இருப்பதே கூட ரிஸ்காக அமையலாம். இதை தவிர்க்கும் வகையில், பொருத்தமான முதலீடு வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும். அதே போல், பி.பி.எப்., முதலீடு நீண்ட கால நோக்கிலானது. ஆனால் குறுகிய கால தேவைக்கு பணம் எடுக்க நினைத்தால், அதன் கட்டுப்பாடு சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே, குறுகிய கால தேவைக்கு ஏற்ற வாய்ப்புகளை நாட தேர்வு செய்திருக்க வேண்டும்.
முதலீட்டாளர்கள் பலரும் செய்யும் மற்றொரு தவறு, வருமானம் தரும் முதலீடுகளை அதிகம் நாடுவது. வருமானம் ஈர்ப்புடையதாக இருக்கலாம், ஆனால் இது முதலீட்டின் வளர்ச்சியை பாதிக்கும். முதிர்வு காலத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. வைப்பு நிதி முதலீடு என்றால் கூட, வட்டி வருமானத்தை, மறுமுதலீடு செய்தால் தான் அதிக பலன் பெறலாம்.
வருமான வழி!
பொதுவாக வருமானம் தரும் முதலீடுகள் ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்றது. வயதில் இளையவர்கள், வளர்ச்சி வாய்ப்புள்ள முதலீடுகளை தேர்வு செய்ய வேண்டும்.பல நேரங்களில், இழப்பு ஏற்படலாம் எனும் அச்சம், அதிக பலன் தரும் முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்வதற்கு தடையாக இருக்கும். அதிக ரிஸ்க் மற்றும் ஏற்ற இறக்கத்தை தவிர்க்க முடியாவிட்டாலும், நிதி இலக்கிற்கு ஏற்ற முதலீட்டை தேர்வு செய்தால் உரிய பலன் பெறலாம்.
எனவே, பாதுகாப்பு அம்சத்தை மட்டுமே முக்கியமாக கருதாமல், முதலீடுகளை தேர்வு செய்ய வேண்டும். இழப்பு காரணமாக, நல்ல வாய்ப்புகளை தவறவிடாமல் இருக்க, பாதுகாப்பிற்காக அவசர கால நிதியை உருவாக்கி வைத்துக்கொண்டால், தயக்கம் இல்லாமல் பொருத்தமான முதலீடுகளை தேர்வு செய்யலாம். முதலீட்டு பரவலாக்க அணுகுமுறை இதற்கு உதவும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|