பதிவு செய்த நாள்
19 நவ2018
06:54
இன்று நடக்கவிருக்கும், ஆர்.பி.ஐ., என்ற, மத்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழுக் கூட்டம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசோடு ஏற்பட்டுள்ள மோதல் தொடருமா; சமாதானம் ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.
வழக்கமாக, மத்திய அரசுக்கும், ஆர்.பி.ஐ., கவர்னர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது சகஜம் தான். நிதித் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கை முடிவுகளில் தான், இவ்விரு அமைப்புகளும் மோதிக் கொள்ளும். ஆரோக்கியமான இந்த மோதல், இம்முறை சற்று எல்லை தாண்டிப் போய்விட்டதோ என்ற கேள்வி எழாமல் இல்லை.இவற்றுக்கெல்லாம் தீர்வு காணும் விதமாகவே, இன்றைய மத்திய குழு கூட்டம் அமையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த, இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் பல்வேறு முன்னேற்றங்கள், இதற்கு அச்சாரம் கூறுகின்றன.
கோரிக்கைகள் :
ஆர்.பி.ஐ.,யிடம் வழக்கத்தைவிட கூடுதலான கையிருப்பு நிதி இருக்கிறது. அது வங்கித் துறைக்கு வழிகாட்டும், ‘பேசல் 3’ நெறிமுறைகள் நிர்ணயித்திருக்கும் தொகையை விட அதிகம்.உதாரணமாக, ஜூன் 30, 2018 நிலவரப்படி, ஆர்.பி.ஐ., வசம் இருக்கும் கையிருப்பு நிதி, 9.5 லட்சம் கோடி ரூபாய். இது, ஆர்.பி.ஐ.,யின் மொத்த சொத்தில், 27 சதவீதம். உலகெங்கும் இருக்கும் வங்கிகள், 16 சதவீத தொகையையே கையிருப்பு வைத்துள்ள நிலையில், இது மிக அதிகம் என்ற கருத்து சொல்லப்படுகிறது.அதேபோல், இடர்ப்பாட்டு நிதியாக இருக்கக்கூடிய தொகை என்பது, ஆர்.பி.ஐ., மொத்த சொத்தில், 8 சதவீதம். ‘பிரிக்ஸ்’ நாடுகளின் மத்திய வங்கிகள் எல்லாம் சராசரியாக, 2 சதவீத தொகையையே இடர்ப்பாட்டு நிதியாக வைத்துள்ளன. அப்படி பார்க்கும்போதும், இது கூடுதல் நிதியே என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.
இன்னொரு முக்கிய பிரச்னை, வாராக் கடன்களால் தத்தளிக்கும், 11 பொதுத்துறை வங்கிகளை, ஆர்.பி.ஐ., ‘உடனடி சீர்திருத்த நடவடிக்கை’ என்ற பெயரில், கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. அதை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மூன்றாவது முக்கிய பிரச்னை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் நசிந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்குப் போதிய நிதியாதாரத்தை ஏற்படுத்தித் தர வேண்டும். ஐ.எல்., அன்ட் எப்.எஸ்., நிறுவனம் சந்தித்த சரிவுக்குப் பின், எம்.எம்.எஸ்.இ., துறைக்குக் கிடைத்து வந்த கடன் வசதிகள் முற்றிலும் நின்றுவிட்டன. அவற்றை மீட்க வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
முன்னேற்றங்கள் :
இவையெல்லாம் நியாயமான கோரிக்கைகள் தான். ஆனால், அவற்றை எப்படி அணுக வேண்டும்; எந்தவிதத்தில் நெறிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்ற தெளிவு இல்லாமல் இருந்தது. ஒருவகையில், துணை கவர்னர் விரால் ஆச்சார்யா பேசியது நல்லதாகப் போயிற்று. அவர், ஆர்.பி.ஐ.,யின் ஆதங்கங்களை வெளிப்படையாக கொட்டினார். அதன் தொடர்ச்சியாக, மத்திய அரசும், ஆர்.பி.ஐ.,யும் கொஞ்சம் கொஞ்சமாக இளக ஆரம்பித்துள்ளன. உதாரணமாக, ஆர்.பி.ஐ., கவர்னர் உர்ஜித் படேலை, பிரதமர் நேரடியாகச் சந்தித்தார். வங்கிகளில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியைக் குறைக்க, வங்கித் துறைக்கு கூடுதல் நிதியை வழங்க, ஆர்.பி.ஐ., முயற்சி எடுக்கத் துவங்கியுள்ள செய்தியும் வெளியாகியுள்ளது.
தீர்வுகள் :
திரும்பவே முடியாத எல்லைக்கு போய்விடக் கூடாது. அப்புறம் தீர்வே கிடைக்காது என்ற எண்ணம், மத்திய அரசுக்கும் இருக்கிறது; ஆர்.பி.ஐ.,க்கும் இருக்கிறது.அதனால், இருவரும் தத்தமது நிலைப்பாடுகளில் லேசாகப் பின்வாங்கி, உண்மை நிலவரங்களை புரிந்து கொள்ளத் துவங்கி இருப்பதாகவே தெரிகிறது. இன்றைய மத்திய குழு கூட்டம், இதன் வெளிப்பாடாகவே இருக்க வாய்ப்புண்டு. உதாரணமாக, வாராக் கடன்களை அதிகம் கொண்டுள்ள பொதுத் துறை வங்கிகளில் இருந்து, ஆர்.பி.ஐ., நியமித்த உறுப்பினர் விலக்கிக் கொள்ளப்படலாம். அவற்றுக்கான நிதிக் கட்டுப்பாடுகள் கொஞ்சம் தளர்த்தப்படலாம்.
சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்குத் தேவைப்படும் கடன் உதவியை வழங்குவதற்கான புதிய செயல் திட்டம் ஏதேனும் வகுக்கப்படலாம். ஆர்.பி.ஐ., எவ்வளவு கையிருப்பு நிதி வைத்துக்கொள்ளலாம் என்பதற்காக, ஏற்கனவே அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் பரிந்துரைகள், மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். இடர்ப்பாட்டு நிதி அளவும் நிர்ணயிக்கப்படலாம். அல்லது அது தொடர்பான, புதிய பரிந்துரைகளை வழங்குவதற்கு ஏதுவாக, குழு ஒன்று நியமிக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்படலாம்.
அதேபோல், நிதிப் பற்றாக்குறைக் கட்டுப்படுத்துவதும், 3.3 சதவீதத்துக்கு மேல் போகக்கூடாது என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கும், மறுபரிசீலனைக்கு உள்ளாகலாம். வளர்ச்சியை மையப்படுத்தும் போது, இலக்கை கொஞ்சம் நகர்த்தி வைத்துக் கொள்வது ஒன்றும் தவறில்லையே. இணக்கமான மனப்பான்மை இருதரப்பிலும் இருந்தால், இவையெல்லாம் நடக்கக்கூடியவை. ஆனால், மத்திய குழுக் கூட்டத்தில் பங்கேற்கப்போகிறவர்களில், நான்கு பேரேனும், ஆர்.பி.ஐ.,யைக் கடுமையாக விமர்சிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினரான குருமூர்த்தி, ஆர்.பி.ஐ., எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என, தன் மாற்றுக்குரலை வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார்.இப்படிப்பட்ட மாற்றுக்குரல்கள் அதிகம் எழுமானால், உர்ஜித் படேல் தன் பதவியை ராஜினாமா செய்துவிடக் கூடிய அபாயம் அதிகம்.
தேச நலனே முக்கியம் :
அவ்வளவு துாரம் போகாது என்றே, விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆர்.பி.ஐ., மத்திய குழு என்பது, பல்வேறு துறைகளில் இருந்து வரும் சாதனையாளர்களின் அவையாக இருக்கிறது. அப்துல் கலாம் உட்பட, பல ஜாம்பவான்கள் இந்த குழுவில் முன்னர் இருந்துள்ளனர். தற்போது கூட, டாடா குழுமத் தலைவரான சந்திரசேகரன், சன் பார்மா எம்.டி. திலிப் சாங்வி, டீம்லீஸ் நிறுவனர்களில் ஒருவரான, மணீஷ் சபர்வால் போன்றோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களது ஆலோசனைகள், புறமொதுக்கத்தக்கதல்ல என்பது, நிச்சயம், ஆர்.பி.ஐ., கவர்னருக்குத் தெரியும். இவை, துறை சார்ந்த வல்லுனர்களின் கருத்துகள்.அதேபோல், மத்திய அரசோடு இணங்கித் தான் பணியாற்ற வேண்டும் என்ற யதார்த்தமும் கவர்னருக்குத் தெரியும். அடிப்படையில், இவர்கள் பேசப் போவது, தேசத்தின் பொருளாதார நலனைப் பற்றியே. இதில் தனி மனித மற்றும் அமைப்புகளின் ஈகோக்கள் முக்கியமல்ல.
தொழில் துறை வளர்ச்சியும், மக்களுக்குக்கான நல்வாழ்வுமே முக்கியம். இவற்றை உறுதிப்படுத்துவதற்கான நிதித் துறை வழிமுறைகள், பரிந்துரைகள் விவாதிக்கப்பட்டன. முடிவுகள் எட்டப்பட்டன என்பதே, நாளை காலை தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும் என்பதே, இந்திய மக்களாகிய நம்முடைய எதிர்பார்ப்பு.
–ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|