பதிவு செய்த நாள்
20 நவ2018
01:11
புதுடில்லி : சரக்கு போக்குவரத்திற்கான மின்னணு வழிச் சீட்டுடன், சுங்கச் சாவடி கட்டணத்திற்கான, ‘பாஸ்டேக்’ வசதியை இணைக்க, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் அமலானால், தொழில் புரிவது மேலும் சுலபமாகும் என்பதுடன், சரக்கு போக்குவரத்தில், வரி ஏய்ப்பு தடுக்கப்படும் என, மத்திய வருவாய் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: ஜி.எஸ்.டி., நடைமுறையின் கீழ், தற்போது, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட சரக்கு போக்குவரத்திற்கு, ‘இ – வே பில்’ எனப்படும் மின்வழிச் சீட்டு அவசியம்.தயாரிப்பு நிறுவனங்கள், சரக்கை விற்பனைக்கு அனுப்பும் போது, இந்த மின்வழிச் சீட்டை கணினியில் தயாரித்து வழங்க வேண்டும்.
சரக்கு போக்குவரத்தில், வரி அதிகாரிகள் சோதனை செய்யும்போது, இந்த சீட்டை காண்பிக்க வேண்டும்.இத்தகைய சரக்கு போக்குவரத்தில், பல்வேறு முறைகேடுகளும், வரி ஏய்ப்பும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.அதனால், மின்வழிச் சீட்டுடன், வாகனங்கள் சுங்கச் சாவடி கட்டணத்தை செலுத்த உதவும், ‘பாஸ்டேக்’ வசதியை இணைக்க, வருவாய் துறை பரிசீலித்து வருகிறது.
சுலபமாக அறியலாம் :
இதன் மூலம், மின்னணு வழிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சரக்கு, உரிய இடத்திற்குத் தான் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை, வரி அதிகாரிகள் சுலபமாக அறிய முடியும். அத்துடன், சப்ளையர்களும், தங்கள் சரக்கு எந்த இடத்தில் உள்ளது என்பதை அறியலாம். சரக்கு போக்குவரத்து நிறுவனங்களுக்கும், இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்நிறுவனங்களின் சரக்கு வாகனங்கள், சுங்கச் சாவடியை கடக்கும் போது, அது குறித்த தகவல், எஸ்.எம்.எஸ்., வழியே கிடைக்கும்.மின்வழிச் சீட்டு, பாஸ்டேக் ஆகியவற்றுடன், எல்.டி.பி., எனப்படும், சரக்கு போக்குவரத்து தரவு வங்கிச் சேவையை இணைப்பது குறித்தும், பரிசீலிக்கப்பட்டு வருகிறது.இதன் மூலம், நாடு முழுவதும் மின்வழிச் சீட்டில் நடைபெறும் சரக்கு போக்குவரத்தின், ஒருங்கிணைந்த தகவல்களை சேமித்து, பராமரிக்க முடியும்.
சரக்கு போக்குவரத்தில், பல அமைப்புகளின் பங்கு உள்ளதால், அவற்றின் தகவல்களை ஒருங்கே பகிர்ந்து கொள்ளும் வசதி தற்போது இல்லை. வருவாய் துறையின் புதிய திட்டம் அமலுக்கு வந்தால், சரக்கு போக்குவரத்தின் பல நிலைகள், ஒரே குடையின் கீழ் வரும்.வருவாய் உயரும்சரக்கு வினியோகத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்படும்.
தொழில் செய்வது சுலபமாகும் என்பதுடன், நிறுவனங்களின் சரக்கு போக்குவரத்து செலவினம் கணிசமாக குறையும். மத்திய அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, வருவாய் துறை பரிசீலித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
விரைவான போக்குவரத்து :
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், விரைவான சரக்கு போக்குவரத்திற்கு, ‘பாஸ்டேக்’ தொழில்நுட்ப வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.வாகன உரிமையாளர்கள் குறிப்பிட்ட தொகையை முன்னதாக செலுத்தியோ அல்லது வங்கிக் கணக்கை இணைத்தோ, பாஸ்ட்டேக் வில்லையை பெறலாம்.இதை, வாகனத்தின் முன்புறக் கண்ணாடி அருகே பொருத்தி விட்டால், வாகனம் சுங்கச் சாவடிக்கு வரும்போது, ‘சென்சார்’ மூலம் உணர்ந்து, பாஸ்டேக் கணக்கில் இருந்து, சுங்க கட்டணம் தானாகவே கழித்துக் கொள்ளப்படும்.
இதனால், சுங்கச் சாவடியில், கட்டணம் செலுத்த நீண்டவரிசையில் காத்திருக்க தேவையில்லை. நாடு முழுவதும், தற்போது, 180 சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் வசதி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|