பதிவு செய்த நாள்
22 நவ2018
23:42
புதுடில்லி : மத்திய அரசு, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு பதிலாக, 2019- – 20ம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்தாண்டு, பிப்., 1ல், 2018- – 19 ஏப்., – மார்ச் வரையிலான நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இது, பிரதமர் மோடி தலைமையிலான, ஐந்தாண்டு ஆட்சிக் காலம், 2019, மே 25ம் தேதியுடன் முடிவதால், அருண் ஜெட்லி தாக்கல் செய்த கடைசி முழு நிதியாண்டு பட்ஜெட் என, கூறப்பட்டது.
அடுத்த ஆண்டு மத்தியில், பொதுத் தேர்தல் நடைபெற்று, புதிய அரசு அமைவது வரைக்கும், தேவையான நிதிச் செலவினங்களுக்கு, பார்லி., ஒப்புதலுடன், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
மாற்றம் :
இந்நிலையில், வழக்கமான இந்த நடைமுறையை கைவிட்டு, முதன் முறையாக, அருண் ஜெட்லி, அடுத்த ஆண்டு, பிப்., 1ல், முழு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை சமர்ப்பிக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு, பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கையும் காரணமாக இருக்கலாம் என, கூறப்படுகிறது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி இறுதியில், ஏப்ரலில் துவங்கும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இதில், ஒரு மாத இடைவெளியில், பட்ஜெட் பணிகளை முடித்து, துறை ரீதியிலான திட்டச் செலவினங்களை மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. ஆகவே, நிதியாண்டு துவக்கம் முதல், செலவினங்களை மேற்கொள்ள வசதியாக, பிப்., 1ல், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை, 2017ல், அறிமுகமானது.
ஒப்புதல் :
அதன்படி, அடுத்த ஆண்டு, பிப்., 1ல், புதிய அரசு அமையும் வரைக்கும், தேவையான நிதிச் செலவினங்களுக்கு, பார்லி., ஒப்புதலுடன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.ஆனால், இம்முறை, மத்திய அரசு, 2019 – -20ம் முழு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.அத்துடன், வழக்கமாக, பட்ஜெட் தாக்கலுக்கு முன் வெளியிடப்படும், பொருளாதார ஆய்வறிக்கையும் வெளியாகும்.பொதுத் தேர்தல் முடிந்து, ஆட்சிக்கு வரும் அரசு தான், பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது வழக்கம்.
புதிய அரசு அமையும் வரை, இடைப்பட்ட இரு மாத காலத்தில், அரசு கொள்கை திட்டங்களில் சுணக்கமோ, தொய்வோ ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில், முழு நிதியாண்டு பட்ஜெட் நடைமுறை முதன் முறையாக அறிமுகமாக உள்ளது.பொதுத் தேர்தலுக்காக, குறுகிய காலத்திற்கு பொருளாதார நடவடிக்கைகளை மாற்ற முடியாது.எந்த செலவினத்திற்கு நிதி தேவையோ, அதற்கு மட்டுமே, பட்ஜெட்டில் ஒப்புதல் கோரப்படும்.
இதையொட்டி, பட்ஜெட் உரை தயாரிப்புக்கு தேவையான விபரங்களை வழங்குமாறு, அக்., 18ல், அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும், அரசு துறைகளுக்கும், நிதியமைச்சகம் கடிதம் அனுப்பியிருந்தது. தற்போது, வரும், 30ம் தேதிக்குள் விபரங்களை வழங்குமாறு, நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விவசாயம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறையினரிடமும், பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
சரியான அணுகுமுறை :
மத்திய அரசு, அதன் கொள்கைகள் இடையூறின்றி தொடர, முழு நிதியாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யவிருப்பது, சரியான நடவடிக்கையாகும். பட்ஜெட்டில், வரி கொள்கை உட்பட, முக்கிய கொள்கை மாற்றங்கள் ஏதும் இல்லாத பட்சத்தில், குறிப்பிட்ட காலத்திற்கான செலவினங்களுக்கு மட்டும் பார்லி.,யில் ஒப்புதல் பெறப்படுவது, சரியான அணுகுமுறையாகும்.
-டி.கே.ஸ்ரீவத்சவா, தலைமை பொருளாதார ஆலோசகர் எர்னஸ்ட் அண்டு யங் இந்தியா
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|