பதிவு செய்த நாள்
23 நவ2018
23:42
தனியார் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், ‘வாழ்நாள் இலவச அழைப்பு’ சேவையை அதிரடியாக நிறுத்தி உள்ளன. இனி, 28 நாட்களுக்கு ஒரு முறை, ‘ரீசார்ஜ்’ செய்யவில்லையெனில், பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மொபைல் எண், செயல்படாத நிலைக்கு செல்லும் என்ற அறிவிப்பால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மொபைல் போன் அறிமுக காலத்தில், ‘இன்கமிங், அவுட்கோயிங்’ என்ற அழைப்புகளுக்கு, தனியார் நிறுவனங்கள் கட்டணம் வசூலித்தன.பின், பொது துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் சேவையில் நுழையும் போது, இன்கமிங் இலவசம் என அறிமுகப்படுத்தியது.இதன் பின், அனைத்து தனியார் மொபைல் போன் நிறுவனங்களும், இன்கமிங்கை இலவசமாக்கின.
அப்போது, அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு, வாழ்நாள் அழைப்பு இலவசம் என்ற வாசகத்துடனும், இலவச சிம் கார்டுகளை வழங்கின. தற்போது, இந்த சேவையை, அந்நிறுவனங்கள் படிப்படியாக, மாநிலம் வாரியாக நிறுத்தி வருகின்றன.
இது குறித்து, சுதாராணி என்பவர் கூறியதாவது:நான் தனியார் நிறுவனம் ஒன்றின், ‘போஸ்ட் பெய்டு’ சேவையை பயன்படுத்தி வந்தேன். இதில், கட்டணம் அதிகமாக வருவதால், பிரீபெய்டு சேவைக்கு மாறலாம் என, அதன் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு சென்றேன். அங்கு, பிரீபெய்டாக மாறினால், 200 ரூபாய்க்கு மேல் தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவில்லையெனில், உங்கள் மொபைல் எண் செயல் இழந்துவிடும் எனக் கூறினார். இது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. வங்கி கணக்கு, ஆதார், காஸ் இணைப்பு என அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும், நிரந்தர எண்ணாக இந்த எண்ணையே கொடுத்துள்ளோம்.இந்த எண் செயல் இழந்துவிடும் எனக் கூறினால், அதை எவ்வாறு ஏற்க முடியும். இது போன்று செயல்படும் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:‘ஆர்ஜியோ’ நிறுவனம் வந்த பின், அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் இழப்பை சந்தித்து வருகின்றன. ஏராளமானோர், வாழ்நாள் அழைப்பு இலவசம்என்பதால், வரும் அழைப்புக்கு மட்டுமே சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால், எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே, மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவில்லையெனில், முதலில் அவுட்கோயிங் துண்டிக்கப்படும்; 15 நாட்களில் இன்கமிங் துண்டிக்கப்படும். பின், நம்பர் செயல் இழந்துவிடும்.
இது குறித்து, தொடர்ச்சியாக குறுந்தகவல்கள் மொபைல் எண்ணுக்கு வரும். மொபைல் எண்ணில், 1,000 ரூபாய் இருப்பு இருந்தாலும், மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவில்லையெனில் மொபைல் எண் செயல் இழந்து விடும். குறைந்தது, 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
25 கோடி பேர் வெளியேறுவர் :
‘ஏர்டெல், வோடபோன் ஐடியா’ நிறுவனங்கள், வரும் அழைப்புகளை வாழ்நாள் முழுவதும் இலவசமாக பெறும் சேவையை நிறுத்தியுள்ளன. அதனால், வரும் அழைப்புகளுக்காக, இந்நிறுவனங்களின் சேவையை வைத்திருந்தவர்கள், தற்போது, 28 நாட்களுக்கு ஒரு முறை, குறைந்தபட்சம், 35 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். அதனால், இப்பிரிவில் இருந்து பலர் வெளியேறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களும், தனி நபர் வருவாய் குறைவாக உள்ள இப்பிரிவை விட, அதிக கட்டணப் பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளன.ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களில் இருந்து, குறைந்த கட்டணப் பிரிவைச் சேர்ந்த, 25 கோடி பேர் வெளியேற வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|