பதிவு செய்த நாள்
25 நவ2018
03:13
புதுடில்லி: மத்திய அரசு, பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு, எம்.இ.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், 5 சதவீத வரிச் சலுகை வழங்கப்படும் என, அறிவித்துள்ளதுபாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி, மூன்றாண்டுகளில் இல்லாத வகையில், நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், முதன் முறையாக குறைந்துள்ளது. வங்கதேசம் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு சந்தைகளில், இந்தியாவின் பாசுமதி அல்லாத அரிசிக்கான தேவை குறைந்ததால், ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. மேலும், மத்திய அரசு இந்தாண்டு, கரீப் பருவத்திற்கான நெல் கொள்முதல் விலையை, 13 சதவீதம் உயர்த்தியதாலும், அரிசி ஏற்றுமதி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், 22 ஆயிரத்து, 968 கோடி ரூபாய் மதிப்பிலான, 86.50 லட்சம் டன், பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. அதில், அண்டை நாடான வங்கதேசத்திற்கு, 20.28 லட்சம் டன் அரிசி அனுப்பப்பட்டது. நடப்பு நிதியாண்டில், ஏப்., – செப்., வரை, 10 ஆயிரத்து, 426 கோடி ரூபாய் மதிப்பிலான, 37.23 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி ஆகியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 42.87 லட்சம் டன்னாக இருந்தது.எனவே, பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதியை அதிகரிக்க, ஏற்றுமதியாளர்களுக்கு வரிச் சலுகை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிக்கையை, அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம், அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், ‘பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு, எம்.இ.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், 5 சதவீத வரிச் சலுகை வழங்கப்படும். இத்திட்டம், நவ., 26 முதல், 2019 மார்ச் 25 வரை அமலில் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, நாளை முதல் அமலுக்கு வர உள்ள இத்திட்டம் மூலம், பாசுமதி அல்லாத அரிசியை வெளிநாடுகளுக்கு அனுப்ப, ஏற்றுமதியாளர்கள் அதிக ஆர்வமுடன் முன் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஊக்குவிப்பு திட்டம் : மத்திய அரசு, ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க, 2015ல், எம்.இ.ஐ.எஸ்., என்ற, வர்த்தக ஏற்றுமதி மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில், பல்வேறு பொருட்களின் ஏற்றுமதிக்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது. ஏற்றுமதி செய்யும் நாடு மற்றும் பொருட்களை பொறுத்து, 2, 3 மற்றும் 5 சதவீத வரிச் சலுகை, ஆவணமாக வழங்கப்படும்.ஏற்றுமதியாளர்கள், விற்றுமுதல் அடிப்படையில் வரிச் சலுகை ஆவணத்தை பெறுவர். இந்த ஆவணம் மூலம், மூலப் பொருட்கள் இறக்குமதிக்கு செலுத்த வேண்டிய வரியை கழித்துக் கொள்ளலாம். அதுபோல, ஜி.எஸ்.டி.,க்கும் இதை பயன்படுத்தலாம். கூடுதலாக செலுத்திய வரியை திரும்பப் பெறும் வசதியும் உள்ளது.
நல்ல வாய்ப்பு : பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி குறைந்து வரும் நிலையில், அதை ஊக்குவிக்க, வரிச் சலுகை வழங்குவது வரவேற்கத்தக்கது. ஏற்றுமதியாளர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த நான்கு மாதங்களில், அரிசி ஏற்றுமதி அதிகரிக்கும்.
பி.வி.கிருஷ்ணா, தலைவர், அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு, காக்கிநாடா
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|