பதிவு செய்த நாள்
26 நவ2018
07:02
வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்யும் போது அதிக வட்டி விகிதத்தை மட்டும் பார்க்காமல், கிரெடிட் ரேட்டிங் உள்ளிட்ட அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும்.
அண்மை காலமாக வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, என்.பி.எப்.சி., எனப்படும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வைப்பு நிதி திட்டங்களுக்கு அளிக்கும் வட்டி விகிதம் உயர்ந்துள்ளன. வீட்டு வசதி நிறுவனங்களும் வைப்பு நிதி முதலீட்டிற்கு அதிக வட்டி வழங்குகின்றன. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதத்தை இரு முறை உயர்த்தியுள்ளது. ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ், மகிந்திரா பைனான்ஸ், எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.
வங்கிகள் அளிக்கும் வைப்பு நிதி வட்டி விகிதத்தை விட இவை அதிகமாக உள்ளன.வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அளிக்கும் வைப்பு நிதி வட்டி விகிதம் ஈர்ப்புடையதாக இருந்தாலும், முதலீடு செய்வதற்கு முன் பாதுகாப்பு அம்சத்தையும் முக்கியமாக பரிசீலிக்க வேண்டும்.
வைப்பு நிதி கவனம் :
வங்கிகள் வழங்கும் வைப்பு நிதி பொதுவானதாக, பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இவற்றில் ரிஸ்க் குறைவு. வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வைப்பு நிதியில் ஒப்பீட்டு அளவில் ரிஸ்க் அதிகம்.வங்கிசாரா நிதி நிறுவனங்கள் சில்லரை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரட்டும் வைப்பு நிதி அவற்றின் நிதியில், 10 அல்லது 15 சதவீதம் அளவே இருப்பதாக கருதப்படுகிறது. அவை பெரும்பகுதியை வங்கிகள் மற்றும் கடன் சந்தையில் இருந்து திரட்டுகின்றன. பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுவதை விட, இது செலவு குறைந்ததாகவும் அமைகிறது.
தற்போது, வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சில்லறை முதலீட்டாளர்கள் மூலமான நிதியை முக்கியமாக கருத துவங்கியுள்ளன. இந்த வகை நிதி செலவு அதிகமானது என்றாலும், நிலையானதாக கருதப்படுகிறது. எனவே அவை வைப்பு நிதியில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளன. இதன் காரணமாக வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அளிக்கும் வட்டி விகிதம் ஈர்ப்புடையதாக அமைந்தாலும், முதலீட்டாளர்கள் அவற்றில் முதலீடு செய்யும் முன், பல்வேறு அம்சங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டும். வைப்பு நிதிகளில் பாதுகாப்பே முக்கியம் என்பதால், நிதி நிறுவனங்களுக்கான கிரெடிட் ரேட்டிங்கை கவனிக்க வேண்டும்.
அதிகபட்ச ரேட்டிங் கொண்ட திட்டங்களை நாடுவது நல்லது. ஆனால், அதிக கிரெடிட் ரேட்டிங் பெற்றிருப்பதால் மட்டும், பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் போகும் வாய்ப்புள்ளது என, கருத முடியாது. ஐ.எல்., அண்ட் எல்.எஸ்., நிறுவனம் அதிக ரேட்டிங் இருந்தும் சிக்கலுக்கு உள்ளானதை மனதில் கொள்ள வேண்டும்.
என்ன செய்யலாம்?
வைப்பு நிதிக்கான ரேட்டிங் தவிர, முதலீட்டாளர்கள் நிறுவனங்கள் தொடர்பான செய்திகளையும் முக்கியமாக கவனித்து வர வேண்டும். நிறுவன செயல்பாடு தொடர்பான தகவல்களையும் அலசி ஆராய வேண்டும். மேலும், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அதிக வட்டி அளிக்க, தற்போது, அவை நெருக்கடியில் இருப்பதும் ஒரு காரணம் எனும் நிலையில், நிறுவன செயல்பாடுகள், அது தொடர்பான செய்திகள் மூலம் அதன் ஆரோக்கியத்தை அறிய வேண்டும்.
சராசரி முதலீட்டாளர்களுக்கு இது சிக்கலாக இருக்கலாம். எனவே, நேரடியாக முதலீடு செய்வதைவிட, இத்தகைய நிதிகளில் முதலீடு செய்யும் ஷார்ட் டெர்ம் டெப்ட் பண்ட் திட்டங்களை நாடலாம். இவை பல நிறுவன நிதிகளில் முதலீடு செய்வதால் ரிஸ்க் குறைகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|