பதிவு செய்த நாள்
26 நவ2018
07:11
பொருளாதார சூழலில் அடிப்படை மாற்றங்கள் நடக்கும் போது, நம்முடைய முதலீடு, ‘போர்ட்போலியோ’ வளரும் சூழலுக்கு ஏற்ப அமைய வேண்டியது அவசியம். ஒரு மாதத்திற்கு முன் இருந்த நிலை விலகி, மாற்று சூழல் உருவாகும் தருணத்தில் இருக்கிறோம். நம்முடைய முதலீடுகள் பெருவாரியாக பழைய சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு இருக்கக் கூடும். தற்போதைய சூழல் சந்தை எதிர்பார்க்காதது. இந்த சூழலுக்கு தயாராக யாரும் இருந்திருக்க அதிக வாய்ப்பில்லை.
இத்தகைய சூழல் மாற்றங்களை எப்படி சந்திப்பது? நாம் என்ன செய்தால், நம் முதலீடுகளை வெற்றிப் பாதையில் நகர்த்த முடியும்? இதுவே, சந்தையில் தற்போது அனைவரது மனதிலும் இருக்கும் முக்கிய கேள்விகள். பொதுவாக, பொருளாதார சூழல்கள் அதிவேக மாற்றங்களை சந்திப்பது அரிது. ஆகவே, முதலீட்டாளர்கள் அத்தகைய சூழல்களை சந்திக்க தம்மை தயார்படுத்திக் கொள்வதில்லை; வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற போக்கிலேயே காலத்தை கழிக்கின்றனர்.
அறிவுரை :
இது, பிற்காலத்தில் பலரை நிலைகுலைந்து போகச்செய்யும். ஊகிப்பது ஒன்றும் எளிதல்ல. பல தருணங்களில் ஊகிக்கவே முடியாத நிகழ்வுகள் நடந்தேறும். ஆகவே, ஊகங்களை கையாள்வது, பல சிக்கல்களில் நம்மை தொடர்ந்து மாட்டி விடும். இந்த இடத்தில், உலக முதலீட்டு அரங்கில் அதிகம் மதிக்கப்படும் ஹவர்ட் மார்க்ஸ் சொல்லும் அறிவுரை முக்கியம். ‘உங்களால் ஊகிக்க முடியாது; ஆனால், தயார்படுத்திக் கொள்ள முடியும்!’ தயார்படுத்திக் கொள்வது என்றால் என்ன? மதிப்பு மிக அதிகமாக அமையும் சூழல்களில், சந்தையில் இருந்து வெளியேறி ரொக்கமாக வைத்துக் கொள்வது.
தயார் நிலை :
அதிக மதிப்பீட்டில் வர்த்தகமாகும் குறிப்பிட்ட பங்குகளை விற்று, பணத்தை ரொக்கமாக கொண்டு காத்திருப்பது. சந்தை இறங்கினால் மேலும் முதலீடு செய்ய தேவையான பணத்தை தயார் நிலையில் வைத்துக் கொள்வது. எப்போதும் சேமிப்பில் ஒரு பகுதியை முதலீடு செய்வதற்கான தயார் நிலையில் வைத்திருப்பது.தற்போது உருவாகும் சூழலுக்கு ஏற்ப, நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். முதலில் மாற்றங்களை அளவிட்டு, ஆய்வு செய்து அதற்கேற்ற பங்குகளை அடையாளம் காணலாம். அவற்றில் எந்தெந்த பங்குகளை வாங்கினால் பலன் அதிகம் என்ற கேள்விக்கு விடை தேடலாம்.
தெளிவான பார்வை :
பொருளாதார மாற்றங்கள் ஒரு புறம் அமைய, அரசியல் மாற்றங்கள் பற்றிய தெளிவு இன்னும் பிறக்கவில்லை. அந்த தெளிவு, தற்போது நடக்கும் ஐந்து மாநில தேர்தல்களில் தெரியத் துவங்கும். மாதந்தோறும், பல அரசியல் கணக்கெடுப்புகள் தொடர்ந்து நடக்கும். அவற்றை தொடர்ந்து கவனித்து, நாம் தெளிவான அரசியல் பார்வையை எடுத்திட வேண்டும். இந்த இரு பார்வைகள் ஒருங்கிணைந்து, முதலீட்டு பார்வையாக அமைய வேண்டும். அதுவே, 2019 தேர்தலுக்கு பின், நம்மை வழிநடத்தும் அளவிற்கு துல்லியமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|