பதிவு செய்த நாள்
26 நவ2018
07:14
பழைய கார், டூ – வீலர்களுக்கு, புதிய கார் மற்றும் டூ – வீலர்களை எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்வது, இங்கே பழக்கத்தில் இருக்கிறது. வீடுகளை அப்படி எக்ஸ்சேஞ்ச் செய்ய முடியுமா? முடியும் என, ஒரு சில கட்டுமான நிறுவனங்கள் வழி காண்பிக்கின்றன. அது எப்படி சாத்தியம்? இது என்ன புதிய கதை?
சமீபத்தில் சென்னையில் ஒரு பெரிய கட்டுமான நிறுவனம், உங்கள் பழைய வீட்டைக் கொடுத்துவிட்டு, புதிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பெற்றுக் கொள்ளலாம் என விளம்பரம் செய்தது, எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியது. இப்படி ஒரு சிந்தனையே இங்கே முற்றிலும் புதுசு. ஏற்கனவே இது போன்ற எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை, பெங்களூரில் ஒரு பெரிய கட்டுமான நிறுவனமும், கொச்சியில் மற்றொரு பெரிய நிறுவனமும் செயல்படுத்தியுள்ளன. அந்நிறுவனங்கள், அதில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளன.
பழசுக்குப் புதுசு என்பது, எல்லா துறைகளிலும் உள்ளது தான். வீட்டு உபயோகப் பொருட்கள் துவங்கி, கார், டூ – வீலர் வரை இந்த உத்தி நடைமுறையில் உள்ளது. ஆனால், வீடுகளில் அப்படி செய்ய முடியுமா? முடியும் என்கின்றனர் இத்துறை நிபுணர்கள். கடந்த, 25, 30 ஆண்டுகளில் பலரும், பல்வேறு சின்ன சின்ன அடுக்ககங்களில் வீடு வாங்கிக் குடியேறியுள்ளனர்; அவர்களது கட்டடங்கள் பழசாகிவிட்டன. அதை விட்டு வெளியேறவும் முடியவில்லை; வெளியேறாமல் இருக்கவும் முடியவில்லை.
விலை வீழ்ச்சி
முக்கிய காரணம், இருக்கும் வீட்டை எப்படி விற்பது என்று தெரியவில்லை. புது வீடுகளோ, பிளாட்டுகளோ, கன்னாபின்னாவென்று விலையேறிக் கிடக்கின்றன. இருக்கும் வீட்டை விற்கப் போனால், மிக மிக மலிவாக விலை கேட்கின்றனர். கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில், இந்தியாமுழுவதும் ரியல் எஸ்டேட் துறை ஒருவித சரிவை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. பங்குச் சந்தை மாதிரி விலை வீழ்ச்சி சட்டென்று நம் கவனத்தைக் கவராது. ஆனால், படிப்படியாக வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. பழைய உற்சாக விலைகளோடு ஒப்பிடும் போது, தற்போது, 30 சதவீத அளவுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
புதிய கட்டடங்கள் பல எழுப்பப்பட்டுள்ளன. அதில் முன்பதிவு செய்து, பணத்தைக் கட்டி, வீடு வாங்கியவர்கள் எண்ணிக்கை குறைவு. பல கட்டடங்களில், 30 முதல், 40 சதவீத வீடுகள் விற்பனை ஆகாமல் தேங்கிப் போயுள்ளன. இது, வீடுகளுக்கு மட்டுமல்ல, வணிக வளாகங்களுக்கும் பொருந்தும். நம்ம ஊரிலேயே ஓ.எம்.ஆர்., – இ.சி.ஆர்., சாலைகளில் உள்ள பல கட்டடங்கள் முழுமையாக பயன்பாட்டுக்கு வராமல், கான்கிரீட் கூடாரங்களாக மாறியுள்ளன. ஆனால், எந்த பில்டரும் விலையை குறைத்துக்கொள்ளத் தயாராக இல்லை. ஒரு சில பில்டர்கள் வேறு சில சலுகைகளைக் கொடுத்து, வாடிக்கையாளர்களை ஈர்த்தனர். 52 விதமான வசதிகள் எங்கள் அடுக்ககத்தில் உள்ளன; அவற்றை நீங்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனர்.
இடைத்தரகர்கள் :
இது நடுவே, பல மாநிலங்களில் கன்ஸ்ட்ரக் ஷன் அக்ரிமென்டையும் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு வந்தது. பத்திரப்பதிவு கட்டணமும் சில மாநிலங்களில் உயர்ந்தன. இவையெல்லாம் சேர்ந்து, தயக்கத்தை ஏற்படுத்திவிட்டன. இந்தச் சமயத்தில் வீடு வாங்க வேண்டுமா என, மத்தியமர்கள் யோசிக்கத் துவங்கிவிட்டனர். இன்றைய சந்தை விலை கட்டுப்படியாகாது; அது இறங்கும் வரை காத்திருப்போம் என, ஒதுங்கிக் கொண்டனர்.
பில்டர்களும் வேறு சிக்கலில் மாட்டிக் கொண்டனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் வீடு கட்டியோர், நிலத்துக்கு கொடுத்த விலை மிக அதிகம்.அதற்கு மேல், கட்டுமானப் பொருட்களும் விலை எகிறிப் போக, அவர்களுடைய அடக்க விலையே அதிகமாகிவிட்டது. விலை குறைக்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இதனால், இரு தரப்பும் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். விளைவு, தேக்கம்.இந்தச் சூழலில் தான், எக்ஸ்சேஞ்ச் உத்திக்கு வந்துள்ளனர் பில்டர்கள்.
இதன்படி, நீங்கள் குறிப்பிட்ட நிறுவனம் கட்டியிருக்கும் அடுக்ககத்தில் வீடு வாங்கிக் கொள்ள ஒப்புக்கொள்ள வேண்டும். அப்புறம், உங்கள் பழைய வீட்டை மதிப்பீடு செய்ய, சுயேச்சையான மதிப்பீட்டாளர் அனுப்பி வைக்கப்படுவார். அவர் கொடுக்கும் மதிப்பீட்டின் அடிப்படையில், வீட்டுக்கு விலை நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில், பிரபலமாக இருக்கும் ரியல் எஸ்டேட் வலைதளங்களில் விளம்பரம் கொடுக்கப்படும். அதற்கான கட்டணத்தை, நிறுவனம் எடுத்துக்கொள்ளும்.
நான்கைந்து இடைத்தரகர்கள் மூலமாக, வீடு விற்பனை செய்யப்பட முயற்சி மேற்கொள்ளப்படும். அதாவது, நீங்கள் அந்த வீட்டை எப்படி விற்கப் போகிறோமே என்று கவலைப்பட வேண்டாம்; அதற்கான முயற்சியை கட்டுமான நிறுவனம் மேற்கொள்ளும். மேலும், புது வீட்டுக்கான முன் தொகை, கட்ட வேண்டிய வேறு தொகைகளையும் செலுத்துவதற்கு, ஓராண்டு வரை கால அவகாசம் வழங்கப்படும். இதை, உண்மையில் எக்ஸ்சேஞ்ச் திருவிழா என்று சொல்ல முடியாது. மாறாக, உங்கள் வீட்டை விற்பதற்கு செய்யப்படும் உதவி என்று வேண்டுமானால் சொல்லலாம்.
யாருக்கு லாபம்?
கட்டுமான நிறுவனங்கள், தங்களிடம் விற்காமல் இருக்கும் வீடுகளைத் தள்ளி விடுவதற்கு, இது ஒரு உபாயம். நகரத்துக்கு உள்ளே இடம் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்த கட்டுமான நிறுவனங்களுக்கு, எக்ஸ்சேஞ்ச் திட்டம் ஒரு வரப் பிரசாதம். தனிநபர்களுக்கும் இது லாபம் தான். இருக்கும் வீட்டையே மூலதனமாக மாற்றிக்கொள்ள முடியுமே.ஒவ்வொரு துறையும் தன் இருப்பை தக்கவைத்துக்கொள்ள, புதிய உத்திகளை அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவை. கட்டுமானத் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு பக்கம் அரசின் சட்ட திட்டங்கள், நெறிமுறைகள், இன்னொரு பக்கம் மக்களின் மனநிலையில் உள்ள தொய்வு, இவற்றை ஒரு மாதிரி சீரமைத்து, தொடர்ச்சியாக தம் துறையை மேம்படுத்த வேண்டிய தேவை கட்டுமானத் துறைக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், எக்ஸ்சேஞ்ச் திருவிழா என்பது, இத்துறைக்குக் கிடைத்திருக்கும் கொழுக்கொம்பு. வாடிக்கையாளர்களும் தம் தேவையை எக்ஸ்சேஞ்ச் திட்டம் நிறைவேற்றுகிறதா என்பதை புரிந்து கொண்டு ஈடுபடுவது நல்லது. தயக்கங்களையும் தேக்கத்தையும் உதறிவிட்டு, புத்துணர்ச்சியோடு இத்துறை மீண்டால் தான், பொருளாதாரம் தலைநிமிரும்.
–ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|