பதிவு செய்த நாள்
27 நவ2018
07:14
புதுடில்லி : மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு, மறு பங்கு மூலதன திட்டத்தின் கீழ், அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள், 42 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்க உள்ளது.
பொதுத் துறை வங்கிகளின் நிதியாதாரத்தை மேம்படுத்த, 2017, அக்., மறு பங்கு மூலதன திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.அப்போது, இத்திட்டத்தின் கீழ், பொதுத் துறை வங்கிகளுக்கு, இரண்டு நிதியாண்டுகளில், 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும்.
இத்தொகையில், மத்திய அரசு, மறு பங்கு மூலதன கடன் பத்திர வெளியீடுகள் மூலம், பொதுத் துறை வங்கிகளுக்கு, 1.35 லட்சம் கோடி ரூபாய் அளிக்கும். எஞ்சியதொகையை, வங்கிகள், நிதிச் சந்தையிலும், பங்கு வெளியீடுகள் வாயிலாகவும் திரட்டிக் கொள்ளும் என, மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அதன்படி, மத்திய அரசு கடந்த ஓராண்டில், மறு பங்கு மூலதன கடன் பத்திரங்கள் மூலம், பொதுத் துறை வங்கிகளுக்கு, 82 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. எஞ்சிய தொகையை, அடுத்த நான்கு மாதங்களில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா :
இது குறித்து, மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, 2019, மார்ச்சுக்குள், பொதுத் துறை வங்கிகளுக்கு, மறுபங்கு மூலதன திட்டத்தின் கீழ், 42 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க உள்ளது. அதில், முதல் தவணை, அடுத்த மாதம் மத்தியில் வழங்கப்படும்.பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற சில பெரிய வங்கிகளுக்கு, பங்கு மூலதன உதவி தேவைப்படாது.
பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, இந்தாண்டு, இரு தவணைகளில் பங்கு மூலதன உதவி வழங்கப்பட்டுள்ளது. அதனால், இதர வங்கிகளுக்கு மட்டும் நிதியுதவி கிடைக்கும். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
தள்ளி வைப்பு :
கடந்த வாரம் நடைபெற்ற ரிசர்வ் வங்கி கூட்டத்தில், ‘பேசல் – 3’ விதிமுறைகளின் அமலாக்கம், 2020, மார்ச் வரை, ஓராண்டுக்கு தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதனால், வங்கிகள் பராமரிக்க வேண்டிய மூலதன இருப்பு விகிதம், 9 சதவீதமாகவே நீடிக்கும். அதேசமயம், கடைசி தவணையான, 0.625 சதவீத, மூலதன பாதுகாப்பு விகிதத்தை, வங்கிகள், 2020, மார்ச்சுக்குள் பராமரிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
இது, பொதுத் துறை வங்கிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. திவால் சட்டம் காரணமாக, வங்கிகளின் வாராக்கடன் வசூல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மூலதன இருப்பு விகித கட்டுப்பாடும் ஓராண்டுக்கு தளர்த்தப்பட்டுள்ளதால், வங்கிகளின் சொத்து மதிப்பு கணிசமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கடன் தகுதி குறையும் :
ரிசர்வ் வங்கி, பொதுத் துறை வங்கிகள் பின்பற்ற வேண்டிய, பேசல் – 3 விதிமுறையை ஓராண்டு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. இது, பொதுத் துறை வங்கிகளின் கடன் தகுதி மதிப்பீடு குறைய வழி வகுக்கும்.
–ஸ்ரீகாந்த் வத்லாமணி,துணை தலைவர், நிதி நிறுவனங்கள் பிரிவு, மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|