பதிவு செய்த நாள்
28 நவ2018
06:21
ஈரோடு : ஏக்கருக்கு, 35 டன் மகசூல் பெறும் ஈரோட்டு மஞ்சளை, தாய்லாந்து நாட்டு விவசாயிகள் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
இது பற்றி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர், காஞ்சனா ராணி வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவில், ஆண்டுக்கு, 1.07 லட்சம் ஹெக்டேரில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. உலக அளவில் மொத்த மஞ்சள் உற்பத்தியில், 75 சதவீதம் இந்தியாவில் விளைகிறது.தமிழகத்தில், ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக, 18 ஆயிரத்து, 986 ஹெக்டேர் சாகுபடி செய்யப்படுகிறது. இதை அடுத்து சேலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கணிசமாக விளைகிறது.
தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் மஞ்சள் ரகங்களில், 90 சதவீதத்துக்கு அதிகமாக நாட்டு ரகங்கள் சாகுபடியாகும்.கோவை வேளாண் பல்கலை, பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையம், கோழிக்கோடு இந்திய வாசனை பயிர்கள் ஆராய்ச்சி மையம் போன்றவை, புதிய உயர் விளைச்சல் ரகங்களை வெளியிட்டு உள்ளது.
இதில், ‘பிரதீபா’ ரக மஞ்சள், ஓரளவு வறட்சியை தாங்கி, நோய் தாக்குதல் இன்றி வளர்ந்து, அதிக மகசூல் தரக்கூடியது.இது குறித்து தகவல் அறிந்து, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த வேளாண் துறையினர், கடந்த மாதம், விவசாயி ஷனான் தலைமையிலான குழுவினர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விவசாய பண்ணையில் பார்வையிட்டனர்.தாய்லாந்து நாட்டில், ஏழு மாதம் மழை பெய்கிறது. உரம், பூச்சி மருந்துகள் இடாமல், இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது.
கரிசல் மண் பூமியாக உள்ளதால், ஈரோடு மஞ்சள் சாகுபடிக்கு ஏற்றது என்பதால், தாய் மஞ்சளை வாங்கி சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளனர்.வரும், 2019 மார்ச் மாதம், தாய்லாந்து நாட்டுக்கு விதை மஞ்சள் அனுப்பப்படுகிறது. தாய்லாந்து மட்டுமின்றி, தைவான், பெரு, உகாண்டா, கம்போடியா, மியான்மர் ஆகிய நாட்டைச் சேர்ந்த விவசாயிகளுக்கும், தாய் மஞ்சள் அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|