பதிவு செய்த நாள்
28 நவ2018
06:27
புதுடில்லி : ‘‘நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், தொடர்ந்து பேச்சு நடத்த வேண்டும்,’’ என, துணை ஜனாதிபதி, வெங்கையா வலியுறுத்திஉள்ளார்.
கறுப்பு ஆடுகள் :
அவர், டில்லியில், இந்திய ஜவுளி துறை கூட்டமைப்பின் வைர விழா நிகழ்ச்சியில் மேலும் பேசியதாவது:தற்போதைய நிதிப் புழக்கப் பிரச்னைக்கு, வங்கிகளை சுயலாபத்திற்காக பயன்படுத்திய சில கறுப்பு ஆடுகள் தான் காரணம். இது, ஒட்டுமொத்த தொழில் துறையில் தாக்கத்தை ஏற்படுத்திஉள்ளது.அரசியல்வாதிகள், தொழில் துறையினர் உட்பட, நாம் அனைவரும் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
வங்கிகள், தாராளமாக கடன் வழங்கிய போது, ரிசர்வ் வங்கி ஏதும் செய்யாமல், தற்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், அடுத்தடுத்து பிரச்னைகள் உருவாகிஉள்ளன.அவற்றை ஆய்வு செய்து, தீர்வு காண, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து பேச்சு நடத்த வேண்டும். இதில், யாருக்கு வலிமை உள்ளது அல்லது இறுதி முடிவெடுக்க யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற கேள்வி எல்லாம் தேவையில்லை.
சீர்திருத்தம் :
மக்கள் தான் முடிவானவர்கள். அவர்கள் நலன் தான் முக்கியம். மக்களின் நல்வாழ்வுக்காகத் தான் அனைத்து திட்டங்களும் உருவாக்கப்படுகின்றன.அதனால், முதலில் ஊடகங்களில் விவாதம் நடத்தி விட்டு, பின், தீர்வுக்கான பேச்சில் ஈடுபடுவதை விட, ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும், உள்மட்ட அளவில் பேச்சு நடத்தி, பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.
உலகளவில், முதலீட்டிற்கு உகந்த நாடாக, இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சீர்திருத்தங்கள் தொடர்ந்தால், உலகில், மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவாகும் என, உலக வங்கி, உலக பொருளாதார கூட்டமைப்பு ஆகியவை தெரிவித்துள்ளன.இவ்வாறு அவர்கூறினார்.
அவர் பேச்சு, மத்திய அரசை வெளிப்படையாக விமர்சனம் செய்த, ரிசர்வ் வங்கி துணை கவர்னர், விரால் ஆச்சார்யாவை கண்டிக்கும் வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஜவுளி துறை, 3 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருகிறது. அடுத்து உருவாகி வரும், நான்காவது தொழில் புரட்சிக்கு தேவையான, புதுமையான தொழில்நுட்பங்களை, ஜவுளி துறை பின்பற்ற வேண்டும்.
–வெங்கையா, துணை ஜனாதிபதி
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|