பதிவு செய்த நாள்
29 நவ2018
23:41
புதுடில்லி : ‘‘கடந்த, 2016, நவ., 8ல், உயர்மதிப்பு கரன்சி செல்லாது என, மிகக் கொடூரமான அதிர்ச்சி தரும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது,’’ என, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர், அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
பாதிப்பு :
கடந்த நான்கு ஆண்டுகளாக பதவியில் இருந்தபோது, மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து மவுனமாக இருந்த அவர், தற்போது ஓய்வுபெற்ற பின், முதன் முறையாக வாய் திறந்துள்ளார். அவர் விரைவில், ‘மோடி – ஜெட்லி பொருளாதார சவால்கள்’ என்ற நுாலை வெளியிட உள்ளார்.
அதில் இடம் பெற்றுள்ள சில கருத்துகள்:
பணமதிப்பு நீக்கம், மிகக் கொடூரமான, அதிர்ச்சி அளிக்கும் நிதி நடவடிக்கையாகும். புழக்கத்தில் இருந்த, 86 சதவீத கரன்சிகள் திரும்பப் பெறப்பட்டன. மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டது.பணமதிப்பு நீக்கத்திற்கு முந்தைய, ஆறு காலாண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, சராசரியாக, 8 சதவீதமாக இருந்தது. அதன் பின், ஏழு காலாண்டுகளில், சராசரியாக, 6.8 சதவீதமாக சரிவடைந்தது.
இந்த பாதிப்பை யாரும் மறுக்க முடியாது. இதே காலத்தில், அதிக வட்டி விகிதம், ஜி.எஸ்.டி., கச்சா எண்ணெய் விலை போன்றவையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தின. இருந்தாலும், பணமதிப்பு நீக்கத்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு, 2 சதவீதமா அல்லது அதற்கும் மேலாகவா என்பது தான், விவாதத்திற்குரிய கேள்வி.
அமைப்பு சாரா துறை :
பணமதிப்பு நீக்கம் போன்ற அதிர்ச்சி நடவடிக்கையின் போது, அமைப்பு சாரா துறை தான் அதிகம் பாதிக்கப்படும். அதேசமயம், இத்துறையைச் சார்ந்துள்ள, அமைப்பு சார்ந்த துறையின் தேவையும் பாதிக்கப்படும். ஆனால், இந்த பாதிப்பு குறைவாகவே காணப்படும்.அதனால், இத்துறை சார்ந்த, மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த மதிப்பீட்டில், தாக்கத்தின் பிரதிபலிப்பு குறைவாகவே இருக்கும்.
மக்களுக்கு, அமைப்பு சாரா துறையின் கடன் வசதி ஓரளவு கைகொடுத்தது. அதன் பின், அவர்கள் ரொக்கத்தில் இருந்து, ‘டெபிட் கார்டு, இ – வேலட்’ போன்ற முறைகளுக்கு மாறினர். மொத்தத்தில், நவீன இந்திய வரலாற்றில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை, பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட்ட தேவையற்ற பரிசோதனை என்றே நான் கருதுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்களின் மனநிலை :
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின். உ.பி., சட்டசபை தேர்தலில், பா.ஜ., பெரும் வெற்றி பெற்றதற்கு, மக்கள் மனநிலை தான் காரணம். பணக்காரர்களின் கறுப்பு பணம் முடக்கப்படுகிறது என்பதால், ஏழைகள், தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை பொறுத்துக் கொண்டனர். இது, ‘எனக்கு ஒரு ஆடு தான் இழப்பு; ஆனால், அவர்கள் பல மாடுகளை இழந்தனரே’ என, மகிழும் மனோபாவத்திற்கு ஒப்பாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|