பதிவு செய்த நாள்
02 டிச2018
02:15
புதுடில்லி:கடந்த நவம்பரில், ஜி.எஸ்.டி., வருவாய், 97,637 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, அக்டோபரில், 1,00,710 கோடி ரூபாயாக இருந்தது.இந்தாண்டு ஏப்ரலில், முதன் முறையாக, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. அதன் பின், சரிந்து, அக்டோபரில், மீண்டும், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்தது.
நவம்பர் இறுதி நிலவரப்படி, அக்டோபர் மாதத்திற்கான, ‘ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி’ படிவத்தில் விற்பனை கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை, 69.6 லட்சமாக அதிகரித்துள்ளது. நவம்பரில் திரட்டப்பட்ட, ஜி.எஸ்.டி., வருவாயில், மத்திய அரசின், சி.ஜி.எஸ்.டி., மூலம், 16,812 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின், எஸ்.ஜி.எஸ்.டி., வாயிலாக, 23,070 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மாநிலங்கள் இடையிலான விற்பனைக்கு,மத்திய அரசு வசூலிக்கும், ஐ.ஜி.எஸ்.டி., மூலம், 49,726 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது.இதில், இறக்குமதி மூலம் கிடைத்த, 24,133 கோடி ரூபாய் மற்றும் கூடுதல் வரி வாயிலாக வசூலித்த, 8,031 கோடி ரூபாய் அடங்கும்.
நவம்பரில், வரி வருவாய் பகிர்வுக்கு பின், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு முறையே, 35,073 கோடி ரூபாய் மற்றும் 38,774 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.‘‘நவம்பரில், ஜி.எஸ்.டி., வசூல் குறைந்தபோதிலும், நடப்பாண்டின் மாதாந்திர சராசரி வருவாய் அதிகரித்து உள்ளது. ‘‘அதனால், மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில் நிர்ணயித்துள்ள, மாதந்திர, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கு, வரும் மாதங்களில் எட்டப்படும்,’’ என, ‘யர்னஸ்ட் யங்’ நிறுவனத்தின் வரித் துறை பங்குதாரர், அபிஷேக் ஜெயின் தெரிவித்துள்ளார்.
முன்னேற்றம் தான்
இந்தாண்டு, ஜி.எஸ்.டி., மூலம், ஜனவரி, 86,318 கோடி ரூபாய்; பிப்ரவரி, 85,000 கோடி ரூபாய்; மார்ச், 89,264 கோடி ரூபாய்; ஏப்ரல், 1,03,458 கோடி ரூபாய்; மே, 94,016 கோடி ரூபாய்; ஜூன், 95,610 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.ஜூலையில், 96,483 கோடி ரூபாய்; ஆகஸ்டில், 93,690 கோடி ரூபாய்; செப்டம்பரில், 94,442 கோடி ரூபாய்; அக்டோபரில், 1,00,710 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|