பதிவு செய்த நாள்
02 டிச2018
23:44
ஒவ்வொரு காலாண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று சொல்லப்படும், ஜி.டி.பி., எண்கள் வெளியாகி,மகிழ்ச்சியையோ, அச்சத்தையோ, எச்சரிக்கையையோ கொடுக்கும்.இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு, ஜி.டி.பி., 7.1 சதவீதம் என, தெரிவித்துள்ளது, மத்திய புள்ளியியல் துறை. இதை எப்படி புரிந்து கொள்வது?
முதல் காலாண்டில், 8.2 சதவீதமாக இருந்த இந்தியாவின் வளர்ச்சி, இரண்டாம் காலாண்டில், 7.1 சதவீதமாக சரிந்துள்ளது.அனைத்து பொருளாதார வல்லுனர்களும், 7.5 சதவீத அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என, எதிர்பார்த்தனர். அது நடைபெறவில்லை எனும் போது, ஒருவித குழப்பமே மிஞ்சி இருக்கிறது.
ஏன் இந்த சரிவு?
முதல் காலாண்டில் அபரிமித வளர்ச்சி ஏற்பட்டதற்கு அடிப்படை காரணம், சென்ற ஆண்டு இருந்த குறைவான வளர்ச்சி. வளர்ச்சியை ஒப்பிடும் போது, கணக்கிடும் போது, சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தோடு தான் ஒப்பீடு செய்யப்படும்.சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டில், வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், இம்முறை அது, 8.2 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளதாக கணக்கிடப்பட்டது.
இரண்டாம் காலாண்டில், துறை ரீதியாக பல்வேறு வளர்ச்சி விகிதங்கள் வெளியாகியுள்ளன. அதன் ஒட்டுமொத்த கூட்டு தான், ஜி.டி.பி., வளர்ச்சி என்பது. அப்படி துறை ரீதியாக பார்க்கும் போது, விவசாயம், தொழில் மற்றும் சேவை துறைகளில் ஏற்பட்டுள்ள தேக்கமோ, சரிவோ தான், வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தேக்கத்துக்கு காரணம்.ஜி.டி.பி.,யைப் போலவே, ஜி.வி.ஏ., என்ற கணக்கீடும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியிடப்படுகிறது.
ஜி.டி.பி., என்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால், ஜி.வி.ஏ., என்பது மொத்த மதிப்புக் கூட்டல்.மொத்த உற்பத்தியில் இருந்து மானியங்கள், வரிகள் ஆகியவற்றை கழித்தால் கிடைப்பதே, ஜி.வி.ஏ., இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், ஜி.வி.ஏ.,வும் சரிந்துள்ளது.முதல் காலாண்டில் இருந்த, 8 சதவீத, ஜி.வி.ஏ., தற்போது இரண்டாம் காலாண்டில், 6.9 சதவீதமாகி உள்ளது.
எந்தெந்த துறைகள்?
இந்த சரிவுகள், நிறைய செய்திகளை சொல்கின்றன. குறிப்பாக, தனிநபர் நுகர்வுக்கான செலவுகள் சரிந்துள்ளன.முதல் காலாண்டில், 8.6 சதவீதமாக இருந்த செலவுகள், இரண்டாம் காலாண்டில், 7 சதவீதமாக குறைந்துள்ளன.இதை இன்னும் விரிவாகப் பார்க்கலாம். இரண்டு முனைகளில் இருந்து, நுகர்வுக்கானசெலவுகள் குறைந்துள்ளன.
கிராமப்புறங்களில் உள்ள நுகர்வு குறைந்திருக்கிறது. அதாவது, அங்கே விவசாயிகள் சிரமப்படுகின்றனர் என்று அர்த்தம். அவர்களது விவசாய உற்பத்திக்குப் போதிய விலை கிடைக்கவில்லை; போதிய சந்தை இல்லை. அதனால், கையில் பணமில்லை.எந்த பொருட்களையும் வாங்கி பயன்படுத்த முடியவில்லை. பொதுவாக, நாம் பொருட்கள் வாங்குவதை குறைத்துக் கொள்வதில்லை. தேவைப்படும் பொருட்களை எப்பாடு பட்டேனும் வாங்கி பயன்படுத்துவோம்.அதைத்தான் அத்தியாவசிய தேவைகள் என்கிறோம்.
போதிய வருவாய் வருகிறதோ, இல்லையோ, பொருட்கள் வாங்குவதை குறைப்பதில்லை. கடனோ, கைமாத்தோ, ஏதோ ஒன்றை வாங்கி நிலைமையை சமாளிப்போம்.இப்போது, நிலைமை கைமீறி போயிருப்பதாகவே அர்த்தம். அவர்களால், அப்படியும் அங்கே இங்கே புரட்டி பணம் வாங்க முடியவில்லை. அதனால், பொருட்கள் வாங்குவதையே குறைத்துக் கொள்ள துவங்கி இருக்கின்றனர்.
மிக மிக மோசமான பண நெருக்கடி, துயரம் ஏற்பட்டால் அன்றி, நாம் நுகர்வு முறைகளை மாற்றிக் கொள்ள மாட்டோம்.விவசாயிகள் தற்போது இந்த நிலைக்கு வந்திருப்பதையே, ஜி.டி.பி.,எண்கள் காட்டுகின்றன.இரண்டாவது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு. அதனாலும், தனிநபர் நுகர்வு குறைந்து போயுள்ளது.
இன்னொரு புள்ளி விபரம்
இதேபோல், அடிப்படை துறைகள், சேவை துறைகளிலும் இரண்டாம் காலாண்டில் சரிவுஏற்பட்டுள்ளது.உற்பத்தி துறையில், முதல் காலாண்டில், 13.5 சதவீதமாக இருந்த வளர்ச்சி, இரண்டாம் காலாண்டில், 7.4 சதவீதம். அதேபோல், கட்டுமானத்துறை, 8.7 சதவீதத்தில் இருந்து, 7.8 சதவீதமாக சரிவு.சுரங்கத்துறை, 0.1 சதவீதத்தில் இருந்து, மைனஸ் 2.4 சதவீதமாக சரிவு. வேளாண் துறை, 5.3 சதவீதத்தில் இருந்து, 3.8 சதவீதமாக சரிவு.
நிதித்துறை சேவைகளில், 6.5ல் இருந்து, 6.3 சதவீதமாக சரிவு.பொதுவாக சேவை துறை தான் வளர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. ஆனால், கடந்த மூன்று காலாண்டுகளாக சேவை துறை படிப்படியாக சரிந்து வருகிறது.மிக வேகமாக வளர்ந்த சேவை துறையில் சரிவு என்றால், அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, வங்கி துறையில்ஏற்பட்டுள்ள பாதிப்பு.
வாராக்கடன் பிரச்னையால், பல வங்கிகள் புதிய கடன்களை வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றன. அதனால், சேவைத்துறைக்கு தேவையான மூலதனம் கிடைப்பதில் சுணக்கம். விளைவு, சரிவு.முதல் அரையாண்டில் நம், ஜி.டி.பி., 7.6 சதவீதமாக உள்ளது. மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது, இது வேகமான வளர்ச்சி தான். குறிப்பாக, சீனாவை விட வேகமான வளர்ச்சி என்றெல்லாம் சமாதானம் சொல்லப்படுகிறது.
அடுத்து வரக்கூடிய இரண்டு காலாண்டுகளில், வளர்ச்சி சிறிது சரிவதற்கான வாய்ப்பு உண்டு. மேலும், தேர்தல் ஆண்டு என்பதால், அரசின் செலவுகள் கூடுதலாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.இந்நிலையில் முழு ஆண்டு, ஜி.டி.பி., 7 சதவீத அளவுக்கே இருக்க வாய்ப்புண்டு என்ற கருத்தையும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆரோக்கியமான ஒரு அம்சம் என்னவென்றால், சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலைகள் சரியத் துவங்கியுள்ளன. இதனால், செலவுகள் கட்டுப்பட்டு, வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. அது, அடுத்த இரண்டு காலாண்டு, ஜி.டி.பி., எண்களில் வெளிப்படலாம் .இந்தியாவில், 76 சதவீத மக்கள் விவசாயத்தையும், அது சார்ந்த தொழில்களையும் நம்பி வாழ்பவர்கள். அவர்களுடைய நிலைமை செம்மையாக இல்லை என்பதை தான், ஜி.டி.பி., உணர்த்துகிறது.அரசு, மற்ற துறைகளுக்கு என்ன செய்கிறதோ, இல்லையோ, விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களை கை துாக்கிவிட வேண்டியது அவசர அவசியம்.
ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|