பதிவு செய்த நாள்
08 டிச2018
04:27
புதுடில்லி:ஜி.எஸ்.டி., கவுன்சில், மூன்று பிரிவுகள் தவிர்த்து, இதர பொருட்கள் அனைத்தையும், 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீத வரி விதிப்பின் கீழ் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ‘டிவி, ஏசி, பிரிஜ்’ உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்களின் விலை குறையும் என, தெரிகிறது.
கடந்த, 2017, ஜூலை, 1ல், நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தது. இதில், 5,12,18 மற்றும் 28 சதவீதம் என, நான்கு வரியினங்கள் உள்ளன.இதை, மூன்றாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி, கடந்த ஒன்றரை ஆண்டுகளில், 28 சதவீத வரி விதிப்பில் இருந்த, 226 பொருட்களில், பெரும்பாலானவற்றின் வரி குறைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஜூலையில், ரெப்ரிஜரேட்டர், வாஷிங் மிஷின், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் மற்றும் பொருட்களின் வரி, 28லிருந்து, 18 சதவீதமாக குறைக்கப் பட்டது. இதனால், மத்திய அரசுக்கு, 11 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் குறைந்தது. தற்போது, 35 பொருட்கள் மட்டுமே, அதிகபட்ச வரி விதிப்பில் உள்ளன. இவற்றுள், வாகனம், சிமென்ட், அவசியமற்ற, ஆடம்பர பொருட்கள் ஆகிய மூன்று பிரிவுகளை தவிர்த்து, எஞ்சிய, 35 பொருட்களுக்கான வரியை, 18 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கூட்டம்
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:டில்லியில், மத்திய நிதியமைச்சர், அருண்ஜெட்லி தலைமையிலான, ஜி.எஸ்.டி., கவுன்சில், வரும், 17ல், கூடுகிறது. இதில், மூன்று பிரிவுகள் தவிர்த்து, எஞ்சிய பொருட்கள் அனைத்தையும், 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீத வரி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து, முடிவெடுக்கப்படும் என, தெரிகிறது.
வரி குறைப்பு குறித்த பரிசீலனை ஏற்கனவே துவங்கிவிட்டது. மேலும், வரி விதிப்பில் உள்ள சில சிக்கல்களை நீக்குவது குறித்தும், இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.குறிப்பாக, 18 சதவீத வரி விதிப்பில் உள்ள ஒரு சில பொருட்களை, 5 சதவீத வரி வரம்பில் கொண்டு வருவது குறித்து முடிவு செய்யப்படும் என, தெரிகிறது.ஜி.எஸ்.டி., கவுன்சில்பரிந்துரைப்படி, வரி குறைக்கப்பட்டால், ‘ஏசி, டிவி, ரெப்ரிஜரேட்டர்’ உள்ளிட்ட சாதனங்கள் விலை, மேலும் குறையும்.
வரி குறைப்பால், மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். அதனால், நடப்பு நிதியாண்டில், ஜி.எஸ்.டி., வசூல், இலக்கை எட்டுமா என, தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
இலக்கை எட்ட முடியுமா?
மத்திய அரசு, நடப்பு 2018 –- 19ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., மூலம், 12 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. சராசரியாக, ஒரு மாதத்திற்கு, 1 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலானால் தான், இது சாத்தியமாகும்.இந்தாண்டு, ஏப்ரல் முதல் நவம்பர் வரை, ஜி.எஸ்.டி., மூலம், 7.76 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
இந்நிலையில், மேலும் பல பெருட்களின் வரி குறைக்கப்பட்டால், வசூல் இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்படும். கடந்த ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் தான், ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.கடந்த நிதியாண்டில், மாதம், சராசரியாக, 89 ஆயிரத்து, 885 கோடி ரூபாய் வசூலானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|