பதிவு செய்த நாள்
13 டிச2018
23:45
மும்பை:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் வழங்க, பி.சி.ஏ., விதிகளை தளர்த்துமாறு, ரிசர்வ் வங்கியிடம், பொதுத் துறை வங்கிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பேற்றுள்ள, சக்திகாந்த தாஸ், நேற்று, பொதுத் துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இதில், ரிசர்வ் வங்கியின் நான்கு துணை கவர்னர்கள், ஐ.டி.பி.ஐ., வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
நெருக்கடி
இது குறித்து, ஒரு வங்கியின் தலைவர் கூறியதாவது:பொதுத் துறையைச் சேர்ந்த, 21 வங்கிகளில், அலகாபாத் வங்கி, தேனா வங்கி, ஆந்திரா வங்கி உட்பட, 11 வங்கிகள், பி.சி.ஏ., எனப்படும், தீவிர கண்காணிப்பு பிரிவின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.இதனால், இவ்வங்கிகளால், பெரிய நிறுவனங்களுக்கு கடன் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சில துறைகளுக்கு, கடன்களை குறைக்க வேண்டிய நெருக்கடியை வங்கிகள் சந்தித்துள்ளன. அத்துடன், புதிய கிளைகளை திறக்கவும், பங்கு முதலீட்டாளர்களுக்கு, ‘டிவிடெண்டு’ வழங்குவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனால், இந்த வங்கிகள் முழுமையான நிதிச் சேவையை மேற்கொண்டு, வளர்ச்சி காண முடியாத சூழலில் உள்ளன.ஆகவே, பி.சி.ஏ., விதிமுறைகளை தளர்த்தி, வங்கிகள் முழுமையான நிதிச் சேவைகளை மேற்கொள்ள வழி வகை செய்ய வேண்டும் என, ரிசர்வ் வங்கி கவர்னரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தாண்டு, பிப்., 12ல் ரிசர்வ் வங்கி, வாராக்கடன் தொடர்பாக, கடுமையான விதிமுறைகளை வெளியிட்டது.
கடன் தவணை
அதில், கடன் தவணையை திரும்பச் செலுத்த, ஒரு நாள் தாமதம் ஆனால் கூட, ஒரு நிறுவனத்தின் கடனை மறுசீரமைக்கவும், அதில் தீர்வு காண தவறினால், திவால் நடவடிக்கை எடுக்கலாம் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விதிமுறையை தளர்த்த வேண்டும் என, பல நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.
இது குறித்தும், ரிசர்வ் வங்கி கவர்னரிடம் எடுத்துரைக்கப்பட்டது.மேலும், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமத்தால், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் சந்தித்து வரும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண, சிறப்பு பணப்புழக்க திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை, வங்கி தலைவர்கள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியவற்றை, சக்திகாந்த தாஸ் கவனமுடன் கேட்டுக் கொண்டார். இன்று நடைபெற உள்ள, ரிசர்வ் வங்கி மத்திய நிர்வாகக் குழு கூட்டத்தில், பொதுத் துறை வங்கி தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வெளிப்படை தன்மை – கட்டுப்பாடு
அமெரிக்க மத்திய டெபாசிட் காப்பீட்டு கழகத்தின், பி.சி.ஏ., செயல் திட்டத்தை பின்பற்றி, அது போன்றதொரு திட்டத்தை, ரிசர்வ் வங்கி, 2002, டிசம்பரில் அறிமுகப்படுத்தியது.ரிசர்வ் வங்கி விதிமுறைகளை சரிவர கடைபிடிக்காத வங்கிகள், பி.சி.ஏ., எனப்படும் தீவிர கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு, அவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இது, வங்கி நடவடிக்கைகளின் வெளிப்படை தன்மைக்கும், நீண்ட கால வளர்ச்சிக்கும் உதவும் என்ற போதிலும், பிரதான நிதிச் சேவை, ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்படுவது தான், வங்கிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதையொட்டி, கடந்த ஆண்டு, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுவின் பரிந்துறையை ஏற்று, பி.சி.ஏ., மறுஆய்வு செய்யப்பட்டது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|