பதிவு செய்த நாள்
17 டிச2018
07:28
ஆர்.பி.ஐ., என்ற, மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த உர்ஜித் படேல், சொந்தக் காரணங்களைச் சொல்லி திடீரென பதவி விலகியவுடன், சக்திகாந்த தாஸ், புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் என்ன செய்யப் போகிறார் அல்லது செய்ய வேண்டும்?
சக்திகாந்த தாஸ் தான் அடுத்த, ஆர்.பி.ஐ., கவர்னர் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே, இரண்டு விதமான விமர்சனங்கள் வந்தன. முன்பு இருந்தவர்களைப் போல, இவர் புகழ்பெற்ற பொருளாதார வல்லுனரும் இல்லை; பேராசிரியரும் இல்லை, என்பது ஒன்று. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, அரசின் அறிவிப்புகள் அனைத்தும் இவர் மூலமாகத் தான் வெளிவந்தன. ஊடகங்களை அப்போது எதிர்கொண்டது இவர் தான். அதற்கான பிரதிபலனாகவே, கவர்னர் பதவி இவரைத் தேடி வந்துள்ளது என்றும் சொல்லப்பட்டது.
கொஞ்சம் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், இவை இரண்டுக்குமே பதில் கிடைக்கும். முன்னாள் கவர்னர்களான, ஒய்.வி.ரெட்டியும் சரி; சுப்பா ராவும் சரி, அரசில் செயலர்களாக இருந்துவிட்டு, பின், ஆர்.பி.ஐ.,க்கு வந்தவர்கள். இத்தனைக்கும், ஒய்.வி.ரெட்டி, ப.சிதம்பரத்தோடு பணியாற்றியவர். ஆனால், ஆர்.பி.ஐ.,க்கு வந்த பின், இருவருக்கும் இடையே மாற்றுக் கருத்துகள் இருக்கவே செய்தன. சுப்பா ராவும் அப்படியே நடந்து கொண்டார். அரசு செயலர்களாக இருந்ததாலேயே, இவர்கள் அரசின் விரலசைவுக்கு கட்டுப்படுவர் என்று சொல்லிவிட முடியாது.
கவர்னர் பொறுப்பேற்றவுடன், சக்திகாந்த தாஸ் பேசும் போது, ஆர்.பி.ஐ.,யின் சுயேச்சை தன்மைக்கு குறை ஏற்படாது என்பதை தெளிவு படுத்தியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சவால்களும் தீர்வுகளும்:
சக்திகாந்த தாஸ் முன், நான்கு சவால்கள் உள்ளன. இவற்றைத் தான் இவர் முதலில் தீர்க்க வேண்டும்.தற்போது, 11 பொதுத்துறை வங்கிகளும், ‘உடனடி சீர்திருத்த நடவடிக்கை’ பட்டியலில் உள்ளன. அவற்றுக்கான நெறிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என, நிதி அமைச்சகம் விரும்புகிறது.
அதன் மூலம், மீண்டும் வங்கிகளில் கடன் வசதி பெருகும். நுண், சிறு, குறு, நடுத்தர தொழில்கள், கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொள்ளும். சக்திகாந்த தாஸ் இதை செய்வார் என்றே நம்பலாம். பெரிய பொதுத் துறை வங்கிகளுக்கேனும் இத்தகைய சலுகையை இவர் வழங்கக்கூடும். முதலீடுகளைத் திரட்ட அனுமதித்து, அதன் மூலம் கடன் கொடுக்கவும் அனுமதிக்கக் கூடும். அதிலும், ஏதேனும் ஓர் உயர்ந்த பட்ச அளவை நிர்ணயம் செய்வார் என்றே தோன்றுகிறது.
இரண்டாவது, வட்டி விகிதங்களை குறைப்பது தொடர்பான முடிவு. சமீபத்திய நிதிக் கொள்கை குழு சந்திப்புக்குப் பின், வட்டி விகிதங்கள் உயர்த்தப்படாமல், அப்படியே வைத்துக்கொள்ளப்பட்டன.சில்லரை பணவீக்கம் குறைந்துள்ள நிலையில், வட்டி விகிதங்களை குறைப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இதன் மூலம், வங்கித் துறையில் பணப் புழக்கம் அதிகரிக்கும். தொழில் துறையினர் கூடுதல் கடன் வாங்குவதற்கு வழி ஏற்படும்.
ஆனால், இதுவும் ஒருவித கட்டுப்பாட்டுக்குள்ளேயே நடைபெறும். லோன் மேளா மாதிரி, பணத்தை வாரிவிடும் கோலாகலங்களை சக்திகாந்த தாஸ் அனுமதிக்க மாட்டார் என்றே கருதலாம்.அப்படி கொடுக்கப்பட்ட கடன்கள் திரும்பி வந்ததே இல்லை; எல்லாமே வாராக் கடன்களாகவே ஆகிப் போய், நாட்டின் கஜானாவில் ஓட்டை போடுகின்றன என்ற உண்மை நிச்சயம் சக்திகாந்த தாஸுக்கும் தெரியும்.
ஏற்கனவே வங்கிகள் சூடு போட்டுக் கொண்டுள்ள நிலையில், இம்முறை கடன் கொடுக்கும் போது, இன்னும் ஜாக்கிரதையாக இருப்பர் என்றே நம்பலாம். மூன்றாவது, வாராக்கடன்களை வசூல் செய்வதில் காட்டப்படும் முனைப்பு, வேகம் ஆகியவற்றால், பல வங்கிகள், வாராக்கடன் வைத்துள்ள நிறுவனங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இவற்றால் கிடைக்கும் பலனை விட, தொழில் துறையினர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் வெறுப்புணர்வு அதிகம்.உதாரணமாக, மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், பல்வேறு மாநில அரசுகள் தரவேண்டிய நிலுவைத் தொகையால் துவண்டு போய் கிடக்கின்றன.இது போன்ற நியாய மான இடங்களில், கொஞ்சம் நிதானத்தோடு வாராக்கடன் வசூல் நடைமுறைகள் மேற்கொள்ள வாய்ப்புண்டு.
ஒப்புதல் தருவார்:
நான்காவது, ஆர்.பி.ஐ., கையிருப்பில் உள்ள, 9.5 லட்சம் கோடி ரூபாய். இதிலிருந்து மூன்றில் ஒரு பங்கையேனும், மத்திய அரசுக்குத் தரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சக்திகாந்த தாஸ் இதற்கு ஒப்புதல் தருவார் என்றே தோன்றுகிறது.மேலும், ஆர்.பி.ஐ., எவ்வளவு நிதியை கையில் வைத்துக்கொள்ளலாம் என்பதை ஆய்வு செய்து, பரிந்துரைகளை வழங்க ஒரு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்ற நிதிக் கொள்கை குழு சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகள் வந்த பின் தான் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால், இந்த விஷயத்தில் உடனடி அவசரம் ஏதுமில்லை.
வரவேற்பு:
சக்திகாந்த தாஸ் தான் அடுத்த கவர்னர் என்ற செய்தி வெளியானவுடனேயே, பங்குச் சந்தையில் ஒருவித மிதப்பும், தெம்பும் வந்துவிட்டது.
அரசோடு இணக்கமாகப் போகக் கூடியவர்; தொழில் துறையினரின் தேவைகள் அறிந்து, அதற்கேற்ப கொள்கைகளை வகுக்கக் கூடியவர் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம்.இவர் யதார்த்தமானவராகவும், கள நிலைமைகளை புரிந்துகொள்ளக் கூடியவராகவும் இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், எந்த வகையிலும் நாட்டின் எதிர்காலப் பொருளாதார நலனில் சமரசம் செய்துகொள்ளக் கூடியவராக இருந்துவிடக் கூடாது. ரகுராம் ராஜன், உர்ஜித் படேல் உதாரணங்கள் வேண்டாம். அதற்கு முந்தைய, ஒய்.வி.ரெட்டி, சுப்பா ராவ் காலத்தையே எடுத்துக் கொள்வோம். அவர்கள் ஆட்சியாளர்களின் உடனடி தேவைகளுக்கு செவி சாய்த்ததில்லை.
மாறாக, கொள்கை ரீதியான மாற்றங்களையும், திருத்தங்களையும் அனுமதித்து, பொருளாதாரச் சூழல் மேம்பாடு அடைய வழி செய்தனர்.அந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டவுடன், தங்களுடைய கட்டுப்பாட்டை மீண்டும் எடுத்துக் கொண்டனர்.அரசிலேயே பல ஆண்டுகள் பணியாற்றியதால், சக்திகாந்த தாஸுக்கும் இவையெல்லாம் தெரிந்திருக்கும். அரசோடு இணக்கம் அவசியம் தான். அதேசமயம், குறுகிய கால பொருளாதார, அரசியல் நலன்களுக்காக, நீண்ட கால சுமைகள் தோளில் ஏறிவிடாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.
–ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|