பதிவு செய்த நாள்
17 டிச2018
07:29
ஐந்து மாநில தேர்தல்களில், தேசிய ஜனநாயக கூட்டணி சந்தித்த பின்னடைவு, ரிசர்வ் வங்கி கவர்னரின் திடீர் ராஜினாமா என, பல அதிரடி செய்திகள் வந்தும், அவை பங்குச் சந்தையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இது, சந்தையில் பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
ஒரு பக்கம் பொருளாதார குறியீடுகள், முன்னேற்றத்தை தெளிவுபடுத்தினாலும், வளர்ச்சி விகிதங்கள் இன்னும் சந்தையின் எதிர்பார்ப்புகளை எட்டவில்லை என்பதே உண்மை.இருந்தும், சந்தையில் தென்படும் நம்பிக்கை எங்கிருந்து தோன்றுகிறது என்று பார்ப்போம்.குறியீடுகளில் இருந்தே துவங்குவோம்... பணவீக்கம் வரலாறு காணாத அளவு குறைந்துள்ளது. வட்டி விகிதங்கள் கூடக்கூடிய சூழல் விலகி, குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதன் வெளிப்பாடு, ரிசர்வ் வங்கியின், 10 ஆண்டு பாண்டு வட்டி வெகுவாக குறைந்ததில் தெளிவாகிறது.
சந்தை, வங்கி வட்டி விகிதம் குறையும் என்று உறுதியாக நம்புகிறது. பணப்புழக்கம் குறைவாக இருந்த இடைக்கால சூழல், பல நிதி நிறுவனங்களின் வாழ்வாதாரத்தையே குலைக்கக்கூடும் என்ற அச்சம் விலகத் துவங்கி உள்ளது.வரும் மாதங்களில், பொருளாதாரத்திற்கு தேவையான அளவு பணத்தை, ரிசர்வ் வங்கி ஏற்படுத்தும் என்று சந்தை உறுதியாக நம்புகிறது. இதனால், நிதி நிறுவனங்களின் அடிப்படை பிரச்னைகள் ஓரளவு சமாளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தையின் அச்சங்கள் உச்சம் தொட்ட சூழல் நீங்கி, இனி பெரிதாக அஞ்சுவதற்கான தேவையில்லை என்ற எண்ண ஓட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், உற்பத்தி குறியீடுகளில் தென்படும் வளர்ச்சி.உருக்கு, மின் உற்பத்தி, சுரங்கம் ஆகிய துறைகளில் வளர்ச்சி அதிகரித்திருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
பொறியியல் சாதனங்கள் துறையில், வரும் ஆண்டு முதல், வளர்ச்சி திரும்பும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஜி.எஸ்.டி., மற்றும் திவால் சட்டங்கள் ஏற்படுத்திய பொருளாதார தாக்கம், வரும் ஆண்டுகளின் வளர்ச்சிக்கு வித்திடும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.நாளை பற்றிய பார்வைகளை இன்றே வளர்த்துக் கொள்வது தான் முதலீட்டுக்கு வெற்றி தரும் என்று உறுதியாக நம்புவோர், சந்தையில் வரும் ஒவ்வொரு வாய்ப்பையும், முதலீடு செய்ய பயன்படுத்துகின்றனர்.
சந்திக்கும் சரிவுகளில் இருந்து, சந்தை உடனடியாக மீண்டு எழுவதன் காரணம் இது தான்.ஆனால், ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். சமீபகாலங்களில் செழிப்பான மதிப்பீடுகளை கண்ட நிறுவனங்களின் மதிப்பு, மேலும் அதிகரிக்க வாய்ப்பு அதிக மில்லை.மாறாக, பலராலும் புறக்கணிக்கப்பட்ட, அடிப்படை தொழில்களில், சந்தை தன் முதலீட்டு கவனத்தை அடுத்த ஆண்டில் செலுத்தும்.சந்தையை முந்திக்கொண்டு முதலீடு செய்யும் சாதுர்யத்தை, முதலீட்டாளர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.அதுமட்டுமல்ல, பன்னாட்டு முதலீட்டாளர்கள் நம்மை முந்திக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும், ஒவ்வொரு முதலீட்டாளரின் கடமை தான்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|