பதிவு செய்த நாள்
20 டிச2018
23:32
புதுடில்லி : இந்தாண்டு, சாதனை அளவாக, 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையிலான இணைத்தல், கையகப்படுத்துதல் மற்றும் தனியார் பங்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது குறித்து, நிதிஆலோசனை நிறுவனமான, பி.டபிள்யு.சி., இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தாண்டு, ஜன., – டிச.,3 வரையிலான காலத்தில், நிறுவனங்கள் இடையிலான இணைத்தல், கையகப்படுத்துதல், தனியார் பங்கு முதலீடுகள் ஆகியவை தொடர்பாக, 1,640 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இவற்றின் மதிப்பு, 7 லட்சம் கோடி ரூபாய். இதன் மூலம், இத்தகைய ஒப்பந்தங்கள் தொடர்பான முந்தைய சாதனைகள் முறியடிக்கப்பட்டு, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, இதை விட அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சீர்திருத்தம் :
இந்தியா மேற்கொண்டு வரும் பல்வேறு சீர்திருத்தங்கள் காரணமாக, சர்வதேச நிறுவனங்கள், இங்கு கால் பதிப்பதில் ஆர்வமாக உள்ளன. குறிப்பாக, ஜி.எஸ்.டி., ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், நிறுவன திவால் சட்டம் ஆகியவற்றை கூறலாம். மேலும், தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் சுலபமாக்கப்பட்டுள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
மதிப்பீட்டு காலத்தில், நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பில், இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல், 50 சதவீத பங்களிப்புடன் முன்னணியில் உள்ளது. அதில், மின்னணு வர்த்தகப் பிரிவு, முதலிடத்தை பிடித்துள்ளது. உள்நாட்டு நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தங்களின் மதிப்பு, 30 சதவீத அளவிற்கு உள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களில், வால்மார்ட், ஸ்நீடர் ஆகியவற்றின் பங்கு, குறிப்பிடத்தக்க அளவிற்கு இருந்தது. இதைத் தொடர்ந்து, அன்னிய நிறுவனங்கள் பலவும், இந்திய சந்தையில் கால் பதிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச சூழல்:
வணிகத்தில், சர்வதேச நாடுகளின் சுய பாதுகாப்பு கொள்கையும், அதனால் உருவாகி வரும் வர்த்தகப் போர் பதற்றமும், அன்னிய நிறுவனங்கள் இடையே, மாற்றுச் சிந்தனையை விதைத்து உள்ளன. அவை, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், குறிப்பாக, இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன. அதற்கான வாய்ப்பு, தொழில்நுட்பம், ஊடகம், பொழுதுபோக்கு, நுகர்வோர் பொருட்கள், நிதிச் சேவைகள், ஆரோக்கிய பராமரிப்பு, ரியல் எஸ்டேட், சரக்கு போக்குவரத்து, அடிப்படை கட்டமைப்பு, உலோகம், சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் உள்ளது. இதன் காரணமாக, வரும் ஆண்டிலும், நிறுவனங்களின் இணைத்தல், கையகப்படுத்துதல், தனியார் பங்கு முதலீட்டு நடவடிக்கைகள் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஆண்டில், வளரும் நாடுகளில், குறிப்பாக, இந்தியாவில், சர்வதேச முதலீடுகள் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கலாம். எனினும், சமீபத்திய, ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளால், அடுத்த ஆண்டு, பொது தேர்தல் வரை, அரசியலில் ஸ்திரமற்ற சூழல் காணப்படும். இத்துடன், வாராக் கடன் மீட்பில் ஏற்படும் தாமதம், கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெருகும் நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட சில அம்சங்களால், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கொள்கையில், தாக்கம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
-சஞ்ஜீவ் கிருஷ்ணன், தலைவர், தனியார் பங்கு முதலீட்டு பிரிவு, பி.டபிள்யு.சி., இந்தியா
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|