பதிவு செய்த நாள்
30 டிச2018
00:31
நாமக்கல்: சபரிமலை சீசனால், கேரளாவில் முட்டைக் கோழி நுகர்வு சரிந்துள்ளது. மேலும், ஐதராபாத் மண்டலத்தில், கொள்முதல் விலை, 50 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், நாமக்கல் மண்டலத்தில், முட்டைக் கோழி கொள்முதல் விலையை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், 80 வாரம் வரை, முட்டையிடும். அதன்பின், இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறது. மாதந்தோறும், 25 லட்சம், வயது முதிர்ந்த முட்டைக் கோழிகள், கர்நாடகா, கேரள மாநிலத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றன.இதன் விலையை, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவான, ‘நெக்’ வியாபாரிகள் முடிவு செய்கின்றனர். முட்டை விலை உயரும்போது, முட்டைக் கோழி தட்டுப்பாடு ஏற்படும். அந்த நேரத்தில், 85 – 90 வாரம் வரை வைத்திருந்து விற்பனை செய்வர்.மேலும், முட்டை விலை குறையும் போது, 75 வாரத்திலேயே விற்பனை செய்துவிடுவர். கடந்த, 1ல், 83 ரூபாய்; 5ல், 84 ரூபாய் எனவும், கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.அதையடுத்து, 17ல், 3 ரூபாய் குறைந்து, 81ம்; 18ல், 7 ரூபாய் குறைக்கப்பட்டு, 74 எனவும், நேற்று முன்தினம், 2 ரூபாய் சரிந்து, 72 ரூபாய் எனவும், கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.முட்டைக் கோழி கொள்முதல் விலை, 22 நாட்களில், 12 ரூபாய் சரிந்துள்ளது, பண்ணையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது, மேலும் சரிய வாய்ப்பு உள்ளதால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:வயது முதிர்ந்த முட்டைக் கோழிகள், கர்நாடகாவுக்கு, 60 சதவீதமும்; கேரளாவுக்கு, 40 சதவீதமும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கோழிகள், முட்டை விலை ஏற்றம், இறக்கத்தை பொறுத்து, விலை நிர்ணயம் செய்யப்படும்.கறிக்கோழி விலை, எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. கேரளாவில், அய்யப்பன் சீசன் விரதம் கடைப்பிடிப்பதால், அங்கு, நுகர்வு சரிந்துள்ளது. மேலும், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் மண்டலத்தில், கொள்முதல் விலை, 50 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு, அதே விலைக்கு கோழிகளை விற்பனை செய்கின்றனர்.ஆனால், நாமக்கல் மண்டலத்தில், 72 ரூபாய் நிர்ணயம் செய்திருந்தாலும், 12 ரூபாய் குறைத்து, வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தற்போது, 14 ரூபாய் குறைத்து, 58 ரூபாய்க்கே கோழிகளை பிடித்துச் செல்கின்றனர்.அதனால், முட்டைக் கோழி கொள்முதல் விலையை, பண்ணையாளர்கள் குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கார்த்திகை மாதம் முடிந்து, தை பிறந்தால் தான் விலை உயரும்.தற்போதுள்ள சூழ்நிலையில், கொள்முதல் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|