பதிவு செய்த நாள்
31 டிச2018
07:15
இந்திய பங்குச் சந்தைகள், கடந்த வாரம் உயர்ந்து வர்த்தகம் ஆகின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி, 350 புள்ளிகள் உயர்ந்து, வர்த்தகம் முடிவுற்றது.
கடந்த வாரம், துறை சார்ந்த பங்குகள், விலை உயர்ந்து வர்த்தகமாகின. நுகர்வோர் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் துறை சார்ந்த பங்குகள், அதிக விலை உயர்ந்து காணப்பட்டன.சர்வதேச சந்தையில், அமெரிக்க பங்குச் சந்தைகளில், 2010ம் ஆண்டுக்குப் பின், அதிக அளவிலான தினசரி சரிவு, கடந்த வாரம் நிகழ்ந்தது. இருப்பினும், இந்திய பங்குச் சந்தைகளில் அதிக அளவில் இது பிரதிபலிக்கவில்லை.
நடப்பு நிதியாண்டின், மூன்றாம் காலாண்டு முடிவுற்ற நிலையில், நிறுவனங்களின் நிதி அறிக்கைகள், ஜனவரி இரண்டாவது வாரம் முதல் வெளிவர உள்ளன.இதில் ஏற்படும் மாற்றங்கள், அத்துறை சார்ந்த பங்குகளின் விலைகளில் அதிக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். நிப்டி குறியீட்டு எண்ணில் அடங்கியுள்ள, 50 நிறுவனங்களின் வருவாய், நடப்பு நிதியாண்டில், 19 சதவீதமாக எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த ஆண்டை விட, 3 சதவீதம் அதிகமாகும். மேலும், அடுத்த நிதியாண்டில், இந்நிறுவனங்களின் ஆதாயம், 22 சதவீதமாக உயரும் என்கிறது, ‘புளூம்பெர்க்’ நிறுவனம்.
கடந்த, 2017ல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி, 28.6 சதவீதமும்; மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 27.9 சதவீதமும் உயர்ந்திருந்தன.நடப்பு ஆண்டில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, இதுவரை சென்செக்ஸ், 5.9 சதவீதமும்; நிப்டி, 3.1 சதவீதமும் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.மற்ற துறைகளைப் பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக, தொழில்நுட்பத் துறை பங்குகளின் ஆதாயம் உயர்ந்தது. தொழில் நுட்பத் துறை, கணினி பிரிவு வளர்ச்சி காரணமாக, 23 சதவீதம் உயர்ந்துள்ளது. அடுத்ததாக, எப்.எம்.சி.ஜி., எனப்படும், நுகர்வோர் பொருட்கள் துறையும், வங்கி சாரா நிறுவன துறையும் உயர்ந்திருந்தது.
நடப்பு ஆண்டில், அதிகப்படியான சரிவை சந்தித்தது, கட்டுமானத் துறை சார்ந்த பங்குகளும், வாகனத் துறை பங்குகளும் ஆகும். மேலும், பொதுத் துறை வங்கிகளின் பங்குகளும் சரிந்திருந்தன. நடப்பாண்டில் ஆசிய நாணயங்களின் மதிப்பை ஒப்பிடும் போது, டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு, 50 சதவீதம் அளவுக்கு சரிந்திருந்தது.கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக, நம் இறக்குமதி சுமை குறைந்து, நடப்பு கணக்குப் பற்றாக்குறையில் சிறிதளவு முன்னேற்றம் காணப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. இதுவும் பங்குச் சந்தைகள் உயர வழி வகுத்தது.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், இந்த டிசம்பர் மாதத்தில், 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அரசு கருவூல சந்தையில் கொள்முதல் செய்வதாக அறிவித்தது. இது, சந்தையில் சாதகமான போக்குக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வாரத்தை பொறுத்தவரை, நிப்டி ரெசிஸ்டென்ட், 10960 மற்றும் 11140 ஆகும். சப்போர்ட், 10785 ஆகும்.
-முருகேஷ் குமார்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|